நெல்லையில் ஜெ. பொதுக்கூட்டத்திற்கு வந்த முதியவர் சாவு! பிரசார பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு
நெல்லை: முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற நெல்லை பிரசார கூட்டத்திற்கு வந்திருந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா பங்கேற்ற விருதாசலம், சேலம், மதுரை பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற தொண்டர்கள் 6 பேர் வெயில் உள்ளிட்ட பல காரணங்களால் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். ஜெயலலிதா தனது பிரசாரத்தை மதியத்தில் இருந்து மாலை நேரத்திற்கு மாற்றிய பிறகு உயிர் பலி நின்றிருந்தது.
இந்நிலையில், பாளையங்கோட்டையில் இன்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க வந்த புளியங்குடியை சேர்ந்த ராஜமணி என்ற 70 வயது முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கூட்டம் முடிந்து திரும்பும்போது, வாகன நிறுத்தம் பகுதியில் ராஜமணி சரிந்து விழுந்து இறந்துள்ளார்.
நெல்லையில் வானம் மேகமூட்டத்துடன், சாரல் மழையுடன் காணப்பட்டது. எனவே வெயில் பாதிப்பால் ராஜமணி இறந்திருக்க வாய்ப்பில்லை. மது அருந்தியது உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.