தட்டானுக்கு சட்டைபோட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான்
ஓணம் பண்டிகை கொண்டாடும் இந்த நாளில் அதை உணர்த்துவதுதான் இந்த 'தட்டானுக்கு சட்டைபோட்டால், குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான்' என்கிற விடுகதை.
சென்னை: இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் வடிவேலு ஒரு விடுகதை சொல்வார், அது பயங்கர காமெடியாக இருந்தாலும் அர்த்தமுள்ள விடுகதை. 'தட்டானுக்கு சட்டைபோட்டால், குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான்' என்று கேட்பார்.
மன்னா தட்டானுக்கு எப்படி மன்னா சட்டை போடமுடியும் கேட்டு விட்டு பதில் தெரியாமல் முழிப்பார்கள். அந்த படத்தில் அதற்கு விளக்கம் கொடுத்திருக்க மாட்டார்கள். இது அர்த்தமர்த்த விடுகதையல்ல. மிகவும் அர்த்தம் பொதிந்த விடுகதை.

ஓணம் பண்டிகைக்கும் இந்த விடுகதைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
தட்டான் என்றால் தட்டாதவன். அதாவது கொடுத்த வாக்கை மீறாதவன் என்று அர்த்தம். அவர்தான் மகாபலி சக்கரவர்த்தி.
குட்டைங்கறதை குறிக்கற இன்னொரு சொல், வாமனம். அப்போ குட்டைப்பையன் என்பது இங்கே வாமன அவதாரம் எடுத்து வந்த மகாவிஷ்ணுவை குறிக்கிறது.
மகாபலி சக்கரவர்த்தி அரக்க குலத்தவராக இருந்தாலும் அறநெறி தவறாமல் யாகங்கள் நடத்தி, யார் எதைக் கேட்டாலும் தட்டாமல் தரும் வள்ளல். அதனால்தான் இங்கே தட்டான் அதாவது. கொடுத்த வாக்கை மீறாதவன் என்று கூறுகிறோம்.
தட்டானுக்கு சட்டை போட்டவர் யார் தெரியுமா? அவர் அசுரகுரு சுக்ராச் சாரியார்.
மகாபாலியிடம் மூன்றடி மண் யாசகம் கேட்டார் வாமனர். அதை தருவதாக ஒத்துக்கொண்டார் மகாபலி.
மூன்றடி இடம் தருவதாக திருமாலுக்கு மகாபலி மன்னன் கொடுத்த வாக்கை எப்படி தடுப்பது என்று யோசித்து பார்த்து ஒரு உபயம் செய்தார். கமண்டல நீரைத்தடுக்க, வண்டாக மாறி கமண்டலத்தின் ஓட்டையை அடைத்தார்.
இதை அறிந்து வாமனர் அவரை கட்டையால் அடிச்சது எப்படி? தெரியுமா? தர்ப்பபைப் புல்லுல நுனி இல்லாம கொஞ்சம் கனமா இருக்கிற கட்டைப்புல்லை எடுத்து கமண்டலத்தின் துவாரத்துல ஒரு குத்து குத்தி உள்ளே அடைச்சுக்கிட்டு இருந்த சுக்ராச்சாரியாரை அடிச்சார் வாமனர். அப்படி குத்தியதில் அசுரகுருவோட ஒரு கண்ணு பறிபோனது.
மகாபலி சக்கரவர்த்தி தண்ணீரை தாரை வார்த்து மூன்றடி நிலத்தை கொடுத்தார். அப்புறம் என்ன வாமனரின் நோக்கம் நிறைவேறியது.
இரண்டடியில் விண்ணையும், மண்ணையும் அளந்தார் வாமனர், மூன்றாவது அடியாக தனது தலையை கொடுத்தார் மகாபலி. அவரது தியாகத்தை போற்றும் வகையிலேயே இன்றைக்கும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அதுதான் 'தட்டானுக்கு சட்டைபோட்டால், குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான்'. இப்போ புரிகிறதா வாசகர்களே.












Click it and Unblock the Notifications