பழனி முருகனை தரிசிக்க பாதயாத்திரை சென்ற பக்தர்கள்..பயங்கரமாக மோதிய பேருந்து..பெண் பலி
பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை வந்த பக்தர்கள் மீது பேருந்து மோதிய விபத்தில் பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்தார்.
பழனி: தண்டாயுதபாணியை தரிசனம் செய்ய பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்தார்.

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம், தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். தேரோட்டம், தெப்ப உற்சவம் என கோலாகலமாக தைப்பூச திருவிழா நடந்து முடிந்துள்ளது.
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் அவ்வப்போது விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இன்றைய தினம் காலையில் பாதையாத்திரை வந்த பக்தர்கள் வையம்பட்டியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது பேருந்து மோதியது. இதில் சிலர் காயமடைந்தனர். நூற்பாலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்து மோதியதில் உமாராணி என்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் தைப்பூச திருவிழாவிற்காக மதுரையிலிருந்து பழனி நோக்கி வந்த பாதயாத்திரை குழுவினரும் கரூரில் இருந்து பழனி நோக்கி வந்த பாதயாத்திரை குழுவினரும் வீரலப்பட்டி பிரிவு அருகே நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த கார் பக்தர்கள் மீது மோதிய விபத்தில் மதுரையைச் சேர்ந்த செல்வி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் சிகிச்சை பெற்ற மற்றொருவரும் பலியானார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 4 பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications