புதுச்சேரி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பரிதாப பலி!
புதுச்சேரி: புதுச்சேரி அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் கற்கள் பறந்து விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளி பகுதியில் ஆத்தோரம் சேகர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இன்று காலை 7 மணியளவில் திடீரென சேகர் பட்டாசு ஆலையில் இருந்த வெடிகள் வெடித்து சிதறின. இதனால் அந்த பட்டாசு ஆலையின் மேல்தளம் மற்றும் சுவர்கள் இடிந்து சுமார் 200 மீட்டர் தொலைவுக்கு பறந்து சென்று விழுந்தது.
இந்நிலையில், அந்த பகுதியில் காலைக் கடன் கழிக்கப் போன அமீர் என்பவர் மீது பட்டாசு ஆலையின் சுவரின் கற்கள் விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த அமீரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்று தாசில்தார் ரமேஷ், இந்த வெடி விபத்து பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வெடி விபத்து ஏதாவது முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்டதா? இதில் ஏதாவது சதி திட்டம் உள்ளதா? போன்ற பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.