இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது
இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த சுபேர் என்பவரை, சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை: இந்து முன்னணியின் கோவை மாநகர மாவட்ட மக்கள் செய்தித் தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த சுபேர் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்து முன்னணியின் கோவை மாநகர மாவட்ட மக்கள் செய்தித்தொடர்பாளராக இருந்தவர், சசிகுமார். இவர், கடந்த ஆண்டு மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.
கோவையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த வழக்கை, முதலில் துடியலூர் போலீஸார் விசாரித்துவந்தனர். அதில், முன்னேற்றம் இல்லாததால், அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு, கோவை கே.கே.நகரைச் சேர்ந்த ஜாபர் அலியின் மகன் சையது அபுதாஹிர் கைதுசெய்யப்பட்டார். மேலும், முபாரக் மற்றும் சதாம் ஆகிய இருவர் முக்கியக் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர்.
இவர்களில் சதாம் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில், தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த சுபேர் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
சதாம் கைதுக்குப் பிறகு பாலக்காட்டில் உள்ள தனது மாமியார் வீட்டில் தலைமறைவாக இருந்துள்ளார் சுபேர். இதனிடையே தனது மனைவியைப் பார்க்க கிணத்துக்கடவு ரயில்வே கேட் அருகே வந்த சுபேரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இதைத் தொடர்ந்து, இன்று மதியம் 2 மணியளவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்த கொலையில் தொடர்புடைய முபாரக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.