ஒருதலை காதல்.. உதவப்போன நண்பருக்கு அடி, உதை.. கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு
ஒரு தலைக் காதல் விவகாரத்தினால் தேன்கனிக்கோட்டை அருகே இருதரப்பினர் மோதிக் கொண்டதில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே ஒரு தலை காதலால் இரு தரப்பினர் மோதிக்கொண்ட விவகாரத்தில் தொடர்புடைய 5 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சூள குண்டா கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபாலச்சாரி. இவரது மகன்கள் லோகேஷ் (வயது 33), சதீஷ்(30).
அதே பகுதியை சேர்ந்த காந்தராஜின் (23) நண்பர் முனிராஜ் சூளகுண்டா கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்து வந்தார். அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதை அறிந்த முனிராஜ் நண்பர் காந்தராஜிடம் காதலுக்கு உதவும்படி கேட்டுள்ளார். அதன்படி, இருவரும் அந்த பெண் தங்கியிருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். இதை கேள்விப்பட்ட லோகேஷ், சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் 10 பேர் அங்கு வந்தனர்.
அப்போது, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதில் காந்தராஜ் பலத்த காயம் அடைந்தார். இவர் இது பற்றி தளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் பேரில் அவரை தாக்கியதாக சதீஷ், லோகேஷ், மஞ்சுநாத் (25), ரமேஷ்(28), குட்டண்ணா(50) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.