காதலிக்க மறுத்தால் கொலை... கொடூர காதலர்கள்.. தமிழகத்தில் தொடரும் கோரக் கொலைகள்!
சென்னை: காதலிக்க மறுத்த காரணத்தால் ஒரு தலைக்காதலர்கள் பெண்களை கொடூரமாக கொலை செய்யும் நிலை அதிகரித்து வருகிறது. நுங்கம்பாக்கம் சுவாதி, விழுப்புரம் நவீனா போல கரூரில் மாணவி சோனாலி ஒருதலைக்காதல் விவகாரத்தில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
இன்று காலையில் தூத்துக்குடி பள்ளி ஆசிரியை பேஷினாவும் ஒருதலைக்காதலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. காதலிக்க மறுத்தால் இதுதான் கதி என்று எச்சரிப்பது போல நடந்தேறியுள்ளது இந்த சம்பவம்.
சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த ஜூன் 24ம் தேதியன்று பணிக்கு செல்வதற்காக காலை 6.30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தார். ரயிலுக்காக காத்திருந்த சுவாதியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிவிட்டார் மர்மநபர்.
சுவாதி கொலையில் ராம்குமார் கைது
சுவாதி கொலை ஒரு தலை காதலால் நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்ட போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் ஜூலை 1ம் தேதி செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாணவி நவீனா
12 ஆம் வகுப்பு மாணவி நவீனாவுக்கு விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா காலனியைச் சேர்ந்த செந்தில் என்ற இளைஞர் கடந்த சில ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். நவீனாவின் வீட்டிற்கு அவரது பெற்றோர் இல்லாத நேரத்தில் சென்ற செந்தில், தன்னை காதலிக்க வேண்டும் என்று நவீனாவை மிரட்டியுள்ளார்.
எரித்துக்கொலை
செந்திலின் காதலை நவீனா ஏற்க மறுத்துவிட்ட நிலையில், தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டு, மாணவி நவீனாவைக் கட்டிப்பிடித்துள்ளார். இதில் தீக்குளித்த செந்தில் உயிரிழந்து விட்ட நிலையில், ஒரு பாவமும் அறியாத மாணவி நவீனாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொடூர கொலை சம்பவமும் கடந்த மாதம் நடந்தேறியது.
கரூரில் பயங்கரம்
தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை சம்பவங்கள் இன்னும் மனதை விட்டு அகலாத நிலையில் கரூரில் இதே போன்ற பயங்கர சம்பவம் நடந்து இருப்பது தமிழகத்தில் மேலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கரூர் பொறியியல் கல்லூரியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் சோனாலி, 20 விடுதியில் தங்கி 3ம் ஆண்டு படித்து வந்தார்.
வகுப்பறையில் கொடூரம்
செவ்வாய்கிழமையன்று காலையில் கல்லூரிக்கு சென்றார். வகுப்பறையில் பேராசிரியர் சதீஷ் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார். காலை 10.10 மணி அளவில் அங்கு வந்த மாணவர் ஒருவர் கையில் கட்டையுடன் வகுப்பறைக்குள் புகுந்தார். மாணவி சோனாலி அருகே சென்றதும் அந்த கட்டையால் சோனாலியின் தலைப்பகுதியில் சரமாரியாக அடித்தார்.
தடுத்த ஆசிரியர்
இதில் சோனாலி தலைசிதறி ரத்தவெள்ளத்தில் வகுப்பறைக்குள் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பேராசிரியர் மற்றும் மாணவ, மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பின்னர் பேராசிரியர் சதீஷ் சுதாரித்துக் கொண்டு மாணவி சோனாலியை காப்பாற்ற அங்கு ஓடோடி சென்றார். சோனாலியை தாக்கிய அந்த மாணவரை தடுத்தார்.
கொலை வெறியில் அடித்த மாணவன்
கொலை வெறியுடன் நின்று கொண்டு இருந்த அந்த மாணவன் பேராசிரியர் சதீசையும் கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் பேராசிரியரும் மயங்கி விழுந்தார். தகவல் அறிந்ததும் கல்லூரி நிர்வாகத்தினரும் மற்ற மாணவ, மாணவிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கு மயங்கி கிடந்த மாணவி சோனாலி, பேராசிரியர் சதீஷ் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மாணவி மரணம்
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது மாணவியின் நிலைமை கவலைக்கிடமாக மாறியதை தொடர்ந்து மாணவி சோனாலியை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மாணவி சோனாலி மாலை சுமார் 4 மணி அளவில் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவன்
சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்தினரிடமும், மாணவ, மாணவிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். கொலை செய்த மாணவனின் பெயர் உதயகுமார் என்பதாகும். ராமநாதபுரம் மாவட்டம் வெங்கனூரைச் சேர்ந்தவர் பெரியசாமி என்பவரின் மகனாவார். இவர் சரியாக படிக்காமலும் சரிவர கல்லூரிக்கு வருவது இல்லையாம். இதனால் கல்லூரி நிர்வாகம் உதயகுமாரை கல்லூரியில் இருந்து நீக்கி வைத்திருந்தது.
ஒருதலைக்காதல்
மாணவர் உதயகுமார் சோனாலியை ஒரு தலையாய் காதலித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. பல முறை தனது காதலை சோனாலியிடம் தெரிவித்ததாகவும் அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்காமல் இருந்ததாகவும் அதனால் ஆத்திரம் அடைந்த உதயகுமார் மாணவியை கல்லூரிக்குள் புகுந்தேஆத்திரம் தீர கட்டையால் அடித்து கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
அடித்துக்கொலை
கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட அந்த மாணவர், தனக்கு முன்பு வழங்கப்பட்ட சீருடையை அணிந்து கொண்டு சக மாணவர்களோடு கலந்து கல்லூரிக்கு வந்து உள்ளார். சோனாலி இருந்த வகுப்பறையை தெரிந்து கொண்டு அவரை அடித்துக் கொன்று உள்ளார்.
உதயகுமார் கைது
இதையடுத்து போலீசார் உதயகுமார் பயன்படுத்திய கட்டையை கைப்பற்றினர். இது குறித்து கரூர் டவுன் போலீசார் உதயகுமார் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய உதயகுமாரை போலீசார் தேடி வந்தனர். பதுங்கியிருந்த உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உறவினர்கள் போராட்டம்
பட்டப்பகலில் கல்லூரிக்குள் நடந்த இந்த சம்பவம் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள், கல்லூரி நிர்வாகத்தினரிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைக் கண்டித்து மாணவியின் உறவினர்களும் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பா இறந்த 3 மாதத்தில் மகள் கொலை
சோனாலியின் அப்பா இறந்து 3 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் சோனாலியையும் கொன்று விட்டனர். சோனாலியை வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியர்கள் இருக்கும்போது மாணவன் வந்து தாக்கியிருக்கிறான். தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து வன்கொடுமைகள் நடைபெறுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் அச்சத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் பயங்கரம்
கரூரில் மாணவி அடித்துக்கொல்லப்பட்ட 24 மணிநேரம் முடிவதற்கு முன்பாகவே தூத்துக்குடியில் தேவாலயத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் ஆசிரியை ஒருவர் வெட்டி கொல்லப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை பேஷினாவை கீகன் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார். அவரது காதலை ஏற்க கீகன் மறுத்து விட்டதாக தெரிகிறது.
கொலையும் தற்கொலையும்
பேஷினாவிற்கு செப்டம்பர் 8ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பள்ளிக்குச் சென்ற ஆசிரியை பேஷினாவை இன்று பள்ளி வளாகத்திலேயே கீகன் வெட்டி விட்டு வீட்டிற்கு வந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கீகனால் அரிவாளால் வெட்டப்பட்ட ஆசிரியை பேஷினா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர் கொலைகள்
கடந்த ஆண்டுகளில் காதலிக்க மறுத்த பெண்களின் மீது ஆசிட் வீசப்பட்டது. இப்போது அரிவாளால் கழுத்தை அறுத்தும், தீவைத்து எரித்தும் கட்டையால் அடித்து கொலை செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. நேற்று கரூரில் கல்லூரியில் வகுப்பறையில் மாணவி ஒருவர் கட்டையால் அடித்துக்கொல்லப்பட்ட நிலையில் இன்று தேவாலய வளாகத்தில் பள்ளி ஆசிரியை பேஷினா வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 மாதத்தில் மட்டும் ஒருதலைக்காதல் சம்பவத்தில் நிகழ்ந்த4வது கொலையாகும்.