வானதி கண்ணில் மட்டும் பட்டுறாம..ஒரே ஒரு படம், டோட்டல் டேமேஜ்.. புல்லட்+ரயில் = புல்லட் ரயில்!
சென்னை: அதிகபட்சமே 130 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயிலை புல்லெட் ரயிலுடன் ஒப்பிட்டு வானதி சீனிவாசன் பேசியது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ரயில் தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் புல்லெட் பைக் ஒன்றும் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு இதுதான் வானதி சீனிவாசன் சொன்ன புல்லெட் ரயில் என்ற பொருளில் நெட்டிசன்கள் பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூர் வழியாக ஓசூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை நேற்று முன் தினம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தமிழகத்திற்குள் ஓடும் முதல் வந்தே பாரத் ரயில் என்பதால் இந்த ரயில் மீதான எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் அதிகரித்தது. சென்னை - கோவை இடையே 130 கி.மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் இந்த வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து கோவைக்கு 5 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்று அடையும்.

புல்லட் ரயில் கனவு நினவாகியதாக..
வந்தே பாரத் ரயிலின் வணிக சேவை நேற்று முதல் தொடங்கிய நிலையில், அடுத்த ஒருவாரத்திற்கான டிக்கெட்டுகள் இரு மார்க்கத்திலும் இல்லை. பயணிகள் மத்தியில் இந்த ரயிலுக்கு அந்த அளவிற்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. இதே நிலைதான் ரயிலின் முதல் நாள் சேவையிலும் இருந்தது. குறிப்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இந்த ரயிலில் பயணித்து விட்டு உற்சாகமாக ரயிலில் உள்ள வசதிகள் குறித்தும் பேசினார்.
அப்போது, நம்முடைய புல்லட் ரயில் கனவு நினைவாகி இருக்கிறது. 2016ஆம் ஆண்டு சீனா சென்றிருந்தபோது புல்லட் ரயிலில் சென்றேன். அதேபோல் நம்முடைய நாட்டிலும் புல்லட் ரயில் இயக்கப்படுமா என்று கனவு எனக்கு இருந்தது, தற்போது அந்த கனவு நினைவாகி இருக்கிறது. வந்தே பாரத் ரயில் நான் பாஜக எம்எல்ஏவாக இருக்கும் சமயத்தில் விடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று வானதி சீனிவாசன் குறிப்பிட்டு இருந்தார்.
வந்தே பாரத் ரயில் அதிகபட்சமே 130 கி.மீட்டர் வேகத்தில்தான் இயக்கப்படும் நிலையில் புல்லெட் ரயிலின் வேகமோ அதை விட பன்மடங்கு அதிகம் ஆகும். அதாவது, சீனாவின் ஷாங்காய் புல்லட் ரயிலை எடுத்துக்கொண்டால் அது 431 கிமீ வேகத்தை அதிகபட்சம் அடையும். சராசரியாக 245 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.

வானத்தை போல காமெடி பாணியில்..
ஜப்பான் புல்லெட் ரயில்களும் அதிகபட்சமாக 500 கிமீ வேகத்தில் செல்லக் கூடியவை. நிலமை இவ்வாறு இருக்க அதிகபட்சமே 130 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயிலை புல்லெட் ரயிலுடன் ஒப்பிட்டு வானதி சீனிவாசன் பேசியது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
வானதி சீனிவாசன் கருத்தை நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கே உரிய பாணியில் விமர்சித்தும் வருகின்றனர். இந்த நிலையில்தான் ரயில் தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் புல்லெட் பைக் ஒன்றும் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு இதுதான் வானதி சீனிவாசன் சொன்ன புல்லெட் ரயில் என்ற பொருளில் நெட்டிசன்கள் பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.
அதாவது, வானத்தை போல படத்தில் ஆனியன் தோசை கேட்கும் கஸ்டமருக்கு தோசை பக்கத்தில் ஒரு முழு ஆனியனை வைத்து இதுதான் ஆனியன் தோசை என்று விஜயகாந்த் பதில் கொடுத்து ஷாக் கொடுப்பார்... இந்த காமெடி பாணியில் தான் தற்போது புல்லெட் ரயில் பற்றிய வானதி சீனிவாசன் கருத்தையும் நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டு இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications