சசிகலா மட்டுமல்ல.. ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சேர்த்தே "செக்" வைக்கும் மோடி
வருமான வரித்துறை சோதனைகள் மூலம் சசிகலாவுக்கு மட்டுமல்லாமல், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சேர்த்தே பாஜக மேலிடம் செக் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: சேகர் ரெட்டியை வருமான வரித்துறை மூலம் தூக்கியது சசிகலாவுக்கு வைக்கப்பட்ட ஆப்பு என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டுள்ளனர். உண்மையில் இது முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சேர்த்து வைக்கப்பட்ட செக் என்கிறார்கள் உண்மை நிலவரம் தெரிந்தவர்கள்.
தமிழகத்தில் திடீரென தலைவிரித்தாடி வருகிறது வருமான வரித்துறை ரெய்டுகள். வரலாறு காணாத வகையில் துணை ராணுவப் படையினரை பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டு நடத்தப்பட்டு வரும் இந்த ரெய்டுகளை மக்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது எதற்காக நடக்கிறது, கறுப்புப் பணத்தை ஒழிக்கத்தானா என்று பல கேள்விகள், குழப்பங்கள், சந்தேகங்கள் இருந்தாலும் கூட அரசியல் ரீதியிலான ரெய்டுகள் இவை என்ற கருத்தில் அனைத்துத் தரப்பினரும் தெளிவாக உள்ளனர்.
யாருக்காக?
இந்த ரெய்டுகள் உண்மையில் யாரைக் குறி வைத்து என்றுதான் இப்போது அரசியல் வட்டாரமும், பொதுமக்களும் யோசித்துக் கொண்டுள்ளனர். உண்மையில் இது தமிழகத்தின் இரு பெரும் அதிகார மையத்தை குறி வைத்து நடத்தப்படுவதாகவே விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.
சசிகலா மட்டுமல்ல
ஆரம்பத்தில் இது சசிகலாவை தனது வழிக்குக் கொண்டு வர பாஜக நடத்தும் நாடகம் என்றுதான் கருதப்பட்டது. காரணம், ஓ.பன்னீர் செல்வம், பாஜக மேலிடத்திற்கு செல்லப் பிள்ளையாகி விட்டார். சசிகலாதான் முரண்டு பிடிக்கிறார். அவரையும் கட்டுக்குள் கொண்டு வந்து விடும் நோக்கில்தான் இது ஏவப்பட்டிருப்பதாக பேசப்பட்டது. ஆனால் உண்மை அப்படி இல்லை.
ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சேர்த்தே
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என்னதான் பாஜக மேலிடத்திற்கு சாதகமாக நடந்து கொண்டாலும் கூட தெரிந்தோ தெரியாமலோ வழி மாறி போய் விடக் கூடாது என்று எச்சரிக்கவே அவரது குடுமியையும் அதாவது சேகர் ரெட்டியை தனது கஸ்டடிக்குக் கொண்டு வந்துள்ளதாம் மத்திய அரசு.. வருமான வரித்துறை மூலமாக.
பெரிய தோஸ்த் ஓபிஎஸ்தான்
சசிகலாவை விட, போயஸ் தோட்டத்தை விட சேகர் ரெட்டிக்கு நெருங்கிய நண்பர் முதல்வர்தானாம். அவரிடம்தான் சேகர் ரெட்டி மிக மிக விசுவாசமாக இருந்துள்ளார். இருவருக்கும் இடையே அப்படி ஒரு நல்ல நட்பு நீடித்து வந்ததாம்.
இருவரது தவறுகளும்
சசிகலாவும் சரி, ஓ.பன்னீர் செல்வமும் சரி என்னென்ன தவறுகள் செய்துள்ளனர் என்பதை லிஸ்ட் போட்டு வருமான வரித்துறைக்குச் சொல்லி விட்டாராம் ரெட்டி. பொதுப்பணித்துறை காண்டிராக்டுகளை லம்ப் லம்ப்பாக இவர் பெற்றபோது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். எனவே அந்த வகையில் அவருடன்தான் தொடர்ந்து நல்ல நட்பில் இருந்துள்ளார் சேகர் ரெட்டி.
இருவருக்குமே சிக்கல்
மொத்தத்தில் சசிகலாவும் சரி, ஓ.பன்னீர் செல்வமும் சரி இருவருமே சேகர் ரெட்டி கைதால் சிக்கலில் உள்ளனர். இதில் யாருக்கு சிக்கலை அதிகம் தருவது என்பதை இவர்களின் போக்கைப் பொறுத்து பாஜக மேலிடம் முடிவு செய்யலாம் என்று சொல்கிறார்கள். ஆக, வலது கை குடுமி சசிகலா என்றால் இடது கை குடுமி ஓ.பன்னீர் செல்வமாக மாறியிருக்கிறது.
எங்கே போய் முடியுமோ இது...!