அப்பல்லோவில் உம்மன் சாண்டி.. ! #jayalalithaa
சென்னை: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து அவர் விசாரித்து விட்டுச் சென்றார்.
முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் குறித்து பல்வேறு தலைவர்களும் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்து விசாரித்துச் செல்கிறார்கள். கேரள முதல்வர் பினரயி விஜயன் சமீபத்தில் வந்து சென்றிருந்தார். இந்த நிலையில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி இன்று அப்பல்லோவுக்கு வந்தார்.
மருத்துவமனைக்குள் போய் விட்டுத் திரும்பிய உம்மன் சாண்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக வந்தேன். நான் மருத்துவமனையில் டாக்டர்களைச் சந்தித்தேன். தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், விஜயபாஸ்கர், லோக்சபா துணைத் தலைவர் தம்பித்துரை உள்ளிட்டோரைச் சந்தித்தேன்.
முதல்வரின் உடல் நலம் நல்லபடியாக முன்னேறி வருவதாக அவர்கள் தெரிவித்தனர். விரைவில் அவர் குணமடைவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். நானும் தமிழக முதல்வர் விரைவில் குணமடைந்து பணிகளுக்குத் திரும்ப வேண்டிக் கொள்கிறேன் என்று கூறினார் உம்மன் சாண்டி.