கனமழையால் ஊட்டி மலை ரயில் சேவை பாதிப்பு- பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை!
ஊட்டி : நீலகிரியில் பெய்து வருகின்ற கனமழை காரணமாக ஊட்டி-குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
அருவங்காடு பகுதியில் தண்டவாளத்தில் மண் சரிந்து விழுந்த காரணத்தினால் மலை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சரிவுகள் அகற்றப்பட்ட பின்னரே மீண்டும் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர் கனமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குன்னூரில் இருந்து வரும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக இயக்கப்படுகின்றன. மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஒருவழிப் பாதையாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரியிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.