ஊட்டியை சூழ்ந்தது “உறைபனி”- கருகும் காய்கறிகள்; குளிரால் நடுங்கும் மக்கள்!
ஊட்டி: ஊட்டியில் கனமழையினைத் தொடர்ந்து உறைபனியின் தாக்கம் துவங்கியுள்ளதால் காய்கறிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மழைகாலம் முடிந்து தற்போது கொட்டும் உறை பனிக் காலம் தொடங்கியுள்ளது.
பகலில் சுட்டெரிக்கும் வெயிலும், இரவில் கடும் உறைபனியும் வாட்டியெடுக்கிறது. இதனால் பொதுமக்கள் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள்.

மலைகளின் அரசி ஊட்டி:
சர்வதேச சுற்றுலா பயணிகள் குவியும் இடங்களில் நீலகிரி மாவட்டமும் ஒன்று. இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், பச்சை கம்பளம் விரித்த புல்வெளிகள், வனங்கள், தேயிலை தோட்டங்கள், அருவிகள், அணைகள் என எக்கசக்க இடங்கள் உள்ளன. குளிர் பிரதேசங்களின் வரிசையில் பேர் போன ஊட்டியில் தற்போது உறைபனி துவங்கியுள்ளது.

கவலையில் விவசாயிகள்:
அதனால், தேயிலை, கேரட், உருளை மற்றும் காய்கறிகள் கடும் பனியால் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பாலீதீன் பைகளால் பாதுகாப்பு:
எனினும் காய்கறி மற்றும் தேயிலையை பனியில் இருந்து காப்பாற்ற இலை, தழைகளை போட்டு தாக்கத்தை விவசாயிகள் குறைத்து வருகிறார்கள். அரசு தாவரவியல் பூங்காவில் மலர்ச்செடிகளை பாலிதீன் பைகளால் போர்த்தியுள்ளனர்.

மாணவர்கள் அவதி:
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் காலை நேரத்தில் கூட நிலவும் கடும் குளிரால் தொப்பி, கையுறை அணிந்தவாறு சென்று வருகிறார்கள். வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு:
நேற்று 5 டிகிரி செல்சியசாக இருந்த வெப்பநிலை இன்று 4.8 டிகிரி செல்சியசாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications