அரசு ஊழியர் போராட்டம் விவகாரம்: சட்டசபையில் இருந்து திமுக, தேமுதிக, பாமக, இடதுசாரிகள் வெளிநடப்பு
சென்னை: தமிழக சட்டசபையில் அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததைக் கண்டித்து திமுக, தேமுதிக, பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இடைக்கால பட்ஜெட்டை நேற்று நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து வெளிநடப்பு செய்தனர்.
இன்று காலை சட்டசபை கூடியபோது இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் போராட்டங்கள் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று திமுக, தேமுதிக, பாமக, புதிய தமிழகம் மற்றும் இடதுசாரி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் இதற்கு அனுமதி அளிக்கவில்லை.

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
இதனைத் தொடர்ந்து அனைத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களும் கூண்டோடு ஒட்டுமொத்தமாக அடுத்தடுத்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுகவின் துரைமுருகன் கூறியதாவது:

அனுமதிக்காத சபாநாயகர்
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையை சட்டசபையில் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச முயற்சிக்கும் போதெல்லாம் சபாநாயகர் பேச அனுமதிப்பது இல்லை. இது ஜனநாயகத்துக்கு எதிரானது.

அரசு ஊழியருக்கு எதிரான அரசு
அரசு ஊழியர்களுக்கு எதிராக இருந்த எந்த அரசும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. அதை தெரிந்து கொண்டுதான் இவர்கள் மெத்தனமாக இருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் பிரச்சனை குறித்து பேச அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்தோம் என்றார்.

காடுவெட்டி குரு ஆஜர்
ஜெயங்கொண்டம் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு கடந்த ஒரு ஆண்டுக்குப் பின்னர் இன்று சட்டசபைக்கு வந்து சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இது குறித்து அவர் கூறுகையில், சட்டசபையில் பேச வாய்ப்பு எங்கே தருகிறார்கள். இதனால்தான் பங்கேற்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications