எதிர்க்கட்சியினர் என்னை மதிப்பதில்லை, ஒருமையில் பேசுகிறார்கள்.. சபாநாயகர் தனபால் குமுறல்!
சென்னை: அமைச்சர்களை திமுகவினர் அவதூறாக பேசுகின்றனர். என்னையும் ஒருமையில் பேசுகின்றனர் என்று சபாநாயகர் தனபால் குற்றம் சாட்டியுள்ளார். எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோ திமுகவினரை தூண்டி விடுவதாக குற்றம் சாட்டினார்.
சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியதும் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து நேற்று இந்த அவையில் சில பிரச்சனைகள் நடந்தது தொடர்பாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசிய பேச்சுக்கு இன்று ஒரு நல்ல தீர்ப்பு தருவதாக கூறி இருந்தீர்கள், அந்த வகையில் அமைச்சர் பேசிய பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்கக்கூடிய பணியை நிறைவேற்றி தரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றார்.

இதற்கு சபாநாயகர் தனபால் பதில் அளிக்கையில் பொறுமையாக இருங்கள். இன்று தீர்ப்பு சொல்வேன். என்னை நீங்கள் வற்புறுத்த வேண்டாம் என்றார். சபாநாயகரின் பதில் திருப்தி அளிக்காததால் மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் தொடர்ந்து தங்கள் கருத்தை வலியுறுத்தினார்கள்.
இந்த சமயத்தில் முதல்வர் ஜெயலலிதா சட்டசபைக்கு வந்தார். அப்போது மு.க.ஸ்டாலின் நாங்கள் சபையை புறக்கணிக்கிறோம் என்று கூறிவிட்டு வெளிநடப்பு செய்தார். அவரை தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் வெளி நடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சட்டசபையில் பேசிய சபாநாயகர் தனபால், பேரவை அமைதியாக நடைபெறுவதை எதிர்கட்சியினர் விரும்பவில்லை என குற்றம் சாட்டினார். மேலும், தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனபால் எச்சரிக்கை விடுத்தார்.
அமைச்சர்களை திமுகவினர் அவதூறாக பேசுகின்றனர். என்னையும் ஒருமையில் பேசுகின்றனர் என்று கூறிய தனபால், எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோ திமுகவினரை தூண்டி விடுவதாக குற்றம் சாட்டினார். ஓ.எஸ்.மணியன் விவகாரத்தில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினர் வலியுறுத்துகிறார்கள். ஓ.எஸ் மணியன் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது. நீக்கச் சொல்லி என்னை கட்டாயப்படுத்த முடியாது என்றும் தனபால் காட்டமுடன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications