ரூபாய் நோட்டு தடைக்கு எதிர்ப்பு- தமிழகத்தில் எதிர்கட்சியினர் தனி தனியாக போராட்டம்
மோடியின் ரூபாய் நோட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் தனி தனியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். மத்திய அரசை கண்டித்து, எதிர்கட்சிகள் இன்று நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
தமிழகத்தில் திமுக, இடதுசாரி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 500,1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி எந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளும் எடுக்காமல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பது எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டாகும்.
கடந்த 20 நாட்களாக பணத் தட்டுப்பாடு பிரச்னையில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். மீனவர்கள், நெசவாளர்கள் உட்பட லட்சக்கணக்கானோர் தொழில்களுக்கு செல்ல முடியாமல் அல்லாடி வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
|
நாடு தழுவிய போராட்டம்
சிறு வணிகர்கள் வியாபாரம் நடைபெறாமல் கடைகளை இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மத்திய அரசின் இந்தக் கடுமையான நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இந்த போராட்டத்தில் திமுக பங்கேற்கிறது.
திமுக ஆர்பாட்டம்
அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், மத்திய அரசு அலுவலகங்களின் முன்பு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். அதன்படி, ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட திமுக சார்பில் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி முன்பு இன்று காலை 9 மணிக்கு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்.
திமுக அழைப்பு
இதேபோல், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அனைத்துப் பிரிவு மக்களின் ஒத்துழைப்புடன், அனைத்து தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத முடிவுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டுமென்று திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தனித்தனியாக ஆர்பாட்டம்
இதேபோல காங்கிரஸ் கட்சி தனியாகவும், கம்யூனிஸ்ட்கட்சியினர் தனியாகவும் ஆர்பாட்டம் நடத்துகின்றனர். கம்யூனிஸ்ட்டுகள் நடத்து ஆர்பாட்டத்தில் வணிகர்கள் சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர்.