ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு ஓபிஎஸ் என 45.32% பேர் கருத்து - புதிய தலைமுறை சர்வே
புதிய தலைமுறை டிவி நடத்திய கருத்துக்கணிப்பில், ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு ஓபிஎஸ் என அதிகமானோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு ஓ.பன்னீர்செல்வம் என புதிய தலைமுறை டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என அதிமுக இரண்டாக பிளவுபட்டது. முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.கவில் தன்னுடைய அரசியல் வாரிசாக சசிகலாவை கைகாட்டியதாக ஆதாரம் உள்ளது என அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.
அதேபோல் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு நான் தான் என்று கூறிவருகிறார். இதனிடையே ஜெயலலிதாவிற்கு அடுத்தபடியாக கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த ஓபிஎஸ் தான் தகுதியானவர் என்பது அவரது ஆதரவாளர்களின் கருத்து.
இந்நிலையில் ஆர்.கே.நகர் மக்களின் நாடிக்கணிப்பு என்ற பெயரில் புதிய தலைமுறை டிவி கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில்
ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு யார் என்ற கேட்கப்பட்ட கேள்வி தீபா என 17.35% பேரும், ஓபிஎஸ் என 45.32% சதவீதம் பேரும், சசிகலா என 4.72% பேரும், பிறர் என 6.99% பேரும், கருத்துக் கூற விரும்பவில்லை என 25.61% பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விசாரணை வேண்டும் என்கிற கோரிக்கை குறித்த கேள்விக்கு நியாயமானது என 70.21% பேரும், அரசியல் உள்நோக்கம் என 9.08% பேரும்,தேவையற்றது என 9.81% பேரும், கருத்துக் கூற விரும்பவில்லை என 10.90% பேரும் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.
அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை, சசிகலா நியமனம் செய்தது சரியா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தவறு எனவே பெரும்பான்மையானவர்கள் கருத்துக் கூறியுள்ளனர். அந்த கேள்விக்கு சரி என 9.81% பேரும், தவறு என 72.75% பேரும், கருத்துக் கூற விரும்பவில்லை என 17.44% பேரும் கருத்துக் கூறியுள்ளனர்.