"ஓரம்கட்டப்பட்ட" ஓ.பி.எஸ் ஜெ.வை திடீரென சந்தித்தது ஏன்?
சென்னை: ஓரங்கட்டப்பட்டார் ஓபிஎஸ் என்று கடந்த ஒருமாதகாலமாக செய்திகள் வெளியான நிலையில் நேற்று திடீரென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஓ. பன்னீர் செல்வம் பேசியது பரபரப்புத் தீயை பற்றவைத்துள்ளது. தன்னைப் பற்றி வெளியாகும் செய்திகளுக்கு தன்னிலை விளக்கம் அளிப்பதற்காகவே அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தாக கூறப்படுகிறது. .
அதிமுகவில் கட்சியிலும் சரி, தமிழக அரசின் ஆட்சியிலும் சரி முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இருந்தவர் அமைச்சர் ஓபிஎஸ். அவரது விசுவாசத்திற்கு கிடைத்த பரிசாகவே இருமுறை அவரை முதல்வர் பதவி நாடி வந்தது.
அதிமுகவில் ஐவர் அணி என்று அழைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவுக்கும் தலைமை வகித்தார். இந்த நிலையில், ஓபிஎஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து அவர் ஓரம்கட்டப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் கண்டறியப்பட்டு கட்சி பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

நால்வர் அணி
ஐவரணியில் இருந்த அமைச்சர்கள் ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் கழற்றிவிட்டப்பட்டு, புதிதாக நால்வர் அணி உதயமானது. இந்த நால்வர் அணியில் அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இடம் பெற்றனர். கூட்டணி பேச்சுவார்த்தையிலும் ஓபிஎஸ் இடம்பெறவில்லை.

கோவை மருத்துவமனையில் தாயார்
தனது தாயாரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதித்த ஓபிஎஸ் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசுவதற்காக நேற்று காலை சென்னை வந்தார். ஜெயலலிதாவின் அழைப்பின் பேரிலேயே அவர் சென்னை திரும்பியதாக கூறப்பட்டது.

அனுமதி மறுப்பு
காலை 11.30 மணி அளவில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசுவதற்காக போயஸ் கார்டன் இல்லத்திற்கு காரில் வந்தார் ஓபிஎஸ் . ஆனால் அப்போது அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதன்பிறகு திரும்பிச்சென்ற அவர் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.

கிடைத்த அனுமதி
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசுவதற்காக ஓபிஎஸ் மீண்டும் காரில் வந்தார். சந்திப்பதற்கான அனுமதியை அவர் முன்கூட்டியே பெற்று இருந்ததால் அவரது காரை போலீசார் வழி மறிக்காமல், உள்ளே அனுமதித்தனர். பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை 45 நிமிடங்கள் சந்தித்து பேசிய அவர், தன் மீது எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு தன்னிலை விளக்கம் அளித்ததாக தெரிகிறது.

அரசியல் கட்சியினர் கேள்வி
அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக கூறி, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பணம் வாங்கியதாக தகவல் வெளியான நிலையில், அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதாவை ஓபிஎஸ் சந்தித்து பேசியிருப்பது அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications