போயஸ் விரைந்தார் ஓ. பன்னீர்செல்வம்.. சசிகலாவுடன் அவசர ஆலோசனை
சென்னை: வரும் 29ம் தேதி அதிமுகவின் பொதுக் குழு கூட உள்ளது. இதுதொடர்பான ஆலோசனை நடத்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போயஸ் கார்டன் சென்றார். அங்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுடன் தீவிர ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 5ம் தேதி ஜெயலலிதா காலமானதையடுத்து, யார் அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் என்ற கேள்வி எழுந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி, சசிகலாதான் பொதுச் செயலாளர் என்று கட்சியின் மூத்தத் தலைவர்கள், நிர்வாகிகள் அறிவித்தனர். இதற்கு அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகி இருந்தாலும், தலைவர்கள் மத்தியில் எந்தவித மாற்றமும் இல்லை.

இந்நிலையில், வரும் 29ம் தேதி செயற்குழு மற்றும் பொதுக் குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த அறிவிப்புக் கடிதம் மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதா இறந்த பின்னர், முதன் முறையாக கூட உள்ள செயற்குழு மற்றும் பொதுக் குழுவில் பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், மிக முக்கியமாக அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளராக சசிகலா இதில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிய வருகிறது.
இந்நிலையில், இன்று போயஸ் கார்டன் சென்றார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். வரும் 29ம் நடைபெற உள்ள செயற்குழு மற்றும் பொதுக் குழு தொடர்பான விரிவான ஆலோசனையை சசிகலாவுடன் ஓ. பன்னீர்செல்வம் நடத்தினார். 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆலோசனையில் பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்ட கூறப்படுகிறது.
டெல்லி பயணத்துக்கு பின் போயஸ் கார்டன் பக்கம் எட்டிப் பார்க்காத முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ஒரு வாரத்திற்கு பிறகு இன்று முதல் முறையாக அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications