அமைச்சரவை கூட்டத்திற்கு முன் அம்மாவுக்கு அஞ்சலி செலுத்திய ஓ.பி.எஸ்..!
சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் தோட்டத்திற்கு சென்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அமைச்சரவைக் கூட்டத்திற்கு சென்றார்.
தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த 5ஆம் தேதியன்று காலமானார். இதையடுத்து புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னர் போயஸ் கார்டன் சென்ற ஓபிஎஸ் அங்கு சசிகலாவுடன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.பின்னர் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு நேராக சென்ற அவர்,அங்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அமைச்சர்கள் புடைசூழ தலைமைச் செயலகம் சென்று,அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். முதல்வர் நாற்காலியில் அமர்ந்து ஜெயலலிதாவிற்கு இரங்கல் செய்தி வாசித்தார் ஓ.பன்னீர் செல்வம்.