அந்த அன்பு ஆடுகள் 'மே' என்று கத்தியதா அல்லது 'அம்மே' என்று கத்தியதா...!
பெரியகுளம்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடித் தீர்த்த நிலையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், உருக்கமாக, 104 ஜோடிகளுக்குக் கல்யாணம் செய்து வைத்து கண்ணீர் மல்க அவர்களை ஆசிர்வதித்து, அம்மா விரைவில் வழக்கிலிருந்து விடுதலையாக வேண்டும், மீண்டும் முதல்வராக வேண்டும் என்று மனதார வேண்டி விரும்பி இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார்.
122 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வையுங்கள். அம்மாவைப் பிடித்த தோஷம் விலகும் என்று (வழக்கம் போல) யாரோ ஒரு ஜோசியர் சொல்லியுள்ளார். இதைக் கேட்ட ஓ.பன்னீர் செல்வம். தேடிப் பிடியுங்கள் 122 ஜோடியை, நானே வந்து நம்ம ஊரில் நடத்தி வைக்கிறேன் என்று தேனி மாவட்ட அதிமுகவினருக்கு உத்தரவு போட, ஓ.பி.எஸ் வட்டாரத்தில் மணமக்களைத் தேடும் பணி தொடங்கியது.

அங்குமிங்கும் அலைந்தும் கூட 104 ஜோடியைத்தான் தேற்ற முடிந்ததாம். அதில் சில ஜோடிகள் முற்றலாக இருந்தது கண்களை உறுத்தினாலும் கூட அவர்களையும் கூட திருமண லிஸ்ட்டில் சேர்த்து விட்டனர். சில ஜோடிகள், அதிமுக இளம் பெண்கள் மற்றும் இளைஞர் பாசறைகளைச் சேர்ந்தவர்களாம்.
இப்படியாக திரட்டப்பட்ட 104 ஜோடிகளுக்கும் பெரியகுளத்தில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் விமரிசையாக திருமணம் நடந்தேறியது. திருமணத்திற்காக முதல் நாளே வந்து விட்ட பன்னீர் செல்வம் திருமண ஏற்பாடுகளை தானே நேரடியாக வந்து பார்வையிட்டு ஒரு குறையும் இல்லாதவாறு மேற்பார்வையிட்டு விட்டுச் சென்றார்.
அம்மாவின் பிறந்த நாளன்று இந்தத் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. 104 ஜோடிகளுக்கும் குத்துவிளக்கு, குக்கர், பால் குக்கர், சட்டி பானை, குட்டி பீரோ, மின்விசிறி என்று 67 சீர்வரிசைப் பொருட்கள் கொடுக்கப்பட்டன. திருமணம் முடிந்ததும் மணமக்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்டார் முதல்ர்.
சரி, அடுத்து ஆடு மேட்டருக்கு வருவோம்...
இது திண்டுக்கல்லில் நடந்த கதை. அதாவது அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுன் தன் பங்குக்கு 67 ஜோடிகளுக்கு் திருமணம் செய்து வைத்து அசத்தினார். இவரும் ஏகப்பட்ட சீர்வரிசைகளை மணமக்களுக்குக் கொடுத்தார். அதில் முக்கியமானது ஆளுக்கு ஒரு ஜோடி ஆட்டுக் குட்டி. எப்படி ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சர்களும் எந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டாலும் அம்மா போட்டோவை முன்னாடி வைத்துக் கொள்கிறார்களோ, அதேபோல இந்த ஆட்டுக் குட்டிகளுக்கும் கழுத்தில் ஜெயலலிதா படத்தை கட்டித் தொங்க விட்டிருந்தனர். பார்ப்பதற்கே படு ஜோராக இருந்தது.. அந்த ஆட்டுக் குட்டிகள் மே என்று கத்தியதா.. அல்லது அம்மே என்று கத்தியதா என்பதுதான் குழப்பமாக இருக்கிறது!












Click it and Unblock the Notifications