திருக்குறள்படி ஜெ. ஆட்சி நடத்தினார்.. தமிழறிஞர்களுக்கு விருது வழங்கி முதல்வர் ஓபிஎஸ் உருக்கம்
திருக்குறள்படி மறைந்த ஜெயலலிதா ஆட்சி நடத்தினார் என்று தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உருக்கமாக பேசினார்.
சென்னை: தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றியவர்களுக்கு அரசு விருது அறிவிக்கப்பட்டது. பெரியார், அண்ணா உள்ளிட்ட பெரும் தலைவர்களின் பெயர்களிலான இந்த விருதுகள் இன்று சென்னையில் நடைபெற்ற தமிழக அரசு விழாவில் வழங்கப்பட்டன.
இந்த விழாவில், விருதினை வழங்கி முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசும் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா திருக்குறளின்படி ஆட்சி செய்தார். ஜெயலலிதாவை அடியொற்றி தமிழக அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

மேலும், தமிழ் எழுத்தாளர்கள், நகைச்சுவையாகவும், நல்ல கருத்துக்களையும் எடுத்து எழுதி வருகின்றனர். இப்படி தமிழ் விருதுகள் வழங்குவதன் மூலம், இளைஞர்கள் மத்தியில் தமிழ் ஆர்வத்தை வளர்க்க முடியும். தமிழக அரசு தமிழ் மொழிக்காக நிறைய செய்திருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
முன்னதாக, திருவள்ளுவர் விருது புலவர் பா. வீரமணிக்கும், தந்தை பெரியார் விருது பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும், அம்பேத்கர் விருது மருத்துவர் இரா. துரைசாமிக்கும், அண்ணா விருது கவிஞர் கூரம் மு.துரைக்கும், காமராஜர் விருது டி. நீலகண்டனுக்கும் பாரதியார் விருது முனைவர் ச. கணபதிராமனுக்கும், பாரதிதாசன் விருது கவிஞர் கோ. பாரதிக்கும், திரு.வி.க. விருது போராசிரியர் மறைமலை இலக்குவனாருக்கும் கி. ஆ.பெ. விஸ்வநாதன் விருது மீனாட்சி முருகரத்தினத்திற்கும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
மேலும், 50 தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் அரசாணைகள் வழங்கப்பட்டன. அதன்படி, ஒவ்வொருவருக்கும் மருத்துவப்படி 100 ரூபாயும், மாத உதவித் தொகையாக 2000 ரூபாயும் கிடைக்கப்பெறும்.












Click it and Unblock the Notifications