ஆட்சியை கைப்பற்ற நினைப்பவர்களின் பகல் கனவு ஒருபோதும் நிறைவேறாது: ஓபிஎஸ் அதிரடி
ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற நினைப்பவர்களின் பகல் கனவு நிறைவேறாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆட்சியை கைப்பற்ற நினைப்பவர்களின் பகல் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவை அடுத்து கட்சியை கைப்பற்றிய சசிகலா. தற்போது முதல்வர் பதவியைக் கைப்பற்ற கடுமையாக மோதி வருகிறார். மக்கள் துணையுடன் அதை முறியடிக்கப் போராடிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்கள் கையில் தான் கட்சி, ஆட்சி இருக்க வேண்டும். அதுதான் தொண்டர்களின் விருப்பம்.
எம்.ஜி.ஆர். நிறுவி வளர்த்த இயக்கம் அதிமுக. எம்.ஜி.ஆருக்கு பிறகு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கட்சியை கட்டிக் காத்தார். அதிமுக தொண்டர்களின் சொத்து. தனிப்பட்ட நபர்களின் சொத்தாக ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதிமுகவை எந்த ஒரு குடும்பமும் கைப்பற்ற விட மாட்டோம். ஆட்சியை கைப்பற்ற நினைப்பவர்களின் பகன் கனவு நிறைவேறாது. விரைவில் நல்லதே நடக்கும் என்றார்.