"அம்மா" போட்டோவை வணங்கி விட்டு பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டைப் பையிலிருந்து எடுத்து அதை வணங்கி விட்டு அதன் பின்னரே முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் ஓ.பன்னீர் செல்வம்.
நேற்று ஆளுநர் மாளிகையில், ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. இந்த பதவியேற்பு விழாவில் பல உருக்கமான காட்சிகளைக் காண முடிந்தது.
கிட்டத்தட்ட அனைத்து அமைச்சர்களும அழுபடியும், தேம்பியும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். கவர்னர் ரோசய்யா மட்டும்தான் அழவில்லை.
இதில் முதலில் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றுக் கொண்டார். இதற்காக அவரை தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் அழைத்தபோது எழுந்து வந்த ஓ.பன்னீர் செல்வம், தனது சட்டைப் பையில் இருந்த ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியில் எடுத்து அதை வணங்கினார். சாமி கும்பிடுவது போல பவ்யமாக வணங்கினார் பன்னீர் செல்வம்.
அதன் பிறகு கலங்கிய கண்களுடன், நா தழுதழுத்தபடி அவர் சத்தியப் பிரமாணத்தை வாசித்தார். அவரால் சரிவர வாசிக்கவும் முடியவில்லை. இதனால் நிறுத்தி நிறுத்தி வாசித்து முடித்தார்.