நான் தலைவனல்ல, முதன்மைத் தொண்டன்... நற்பணி மன்றங்களுக்கு நோ சொன்ன ஓபிஸ்!
தன்னுடைய பெயரில் நற்பணி மன்றங்கள் தொடங்க வேண்டாம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கிய அமைப்புகளைத் தவிர தனது பெயரில் நற்பணி மன்றங்கள் தொடங்குவதில் மகிழ்ச்சியில்லை என்றும், எனவே தனது பெயரில் நற்பணி மன்றங்கள் தொடங்க வேண்டாம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் பொருளாளரும், முன்னாள் முதல்வருமான, ஓ.பன்னீர்செல்வம் தனது பெயரில் வெளியாகியுள்ள நற்பணி மன்றங்கள் குறித்து தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாகவது:
ஜெயலலிதாவை இதயக் கோவிலில் வைத்து வணங்கிக் கொண்டிருக்கும் விசுவாசத் தொண்டர்களுக்கு அன்பு வணக்கம். ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டுமென ஒரு தர்மயுத்தத்தைத் தொடங்கினோம்.
புரட்சிப் பயணம்
கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கக்கூடாது என்ற லட்சியத்தை, சபதமாக மேற்கொண்டு ஒரு புனிதப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். உங்களுடைய அமோக ஆதரவினால், அந்தப் புனிதப் பயணம் புரட்சிப் பயணமாகவே மாறிப்போனது.
மன்றங்களால் மகிழ்ச்சி இல்லை
தமிழக மக்களுடைய நல்லாசிகளோடு நமது புரட்சிப் பயணம் வெற்றித் திசை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த எழுச்சியான நேரத்தில் எனது பெயரில் நற்பணி மன்றங்கள் தொடங்கப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.
தொண்டனாகவே விரும்புகிறேன்
இப்பொழுதும் சரி., இனி எப்பொழுதும் சரி., கழகத்தின் ஒன்றரைக் கோடி விசுவாசத் தொண்டர்களில் நானும் ஒரு தொண்டனாக இருப்பேன். ஜெயலலிதாவின் லட்சியத்தைக் காக்க, கொள்கைகள் வெற்றியடைய பாடுபடும் படைவீரனாக, உங்களில் ஒருவனாகவே இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.
ஜெ. புகழ்
என்மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக, நம்பிக்கையின் காரணமாகத்தான் நற்பணி மன்றங்கள் தொடங்கியுள்ளீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் முதல்வராக இருந்தபோதும் ஜெயலலிதா புகழ்பாடும் முதன்மைத் தொண்டனாகத்தான் இருந்தேன்.
முதன்மை தொண்டன்
நான் மட்டுமல்ல, நாம் அனைவரும் ஜெயலலிதாவின் புகழ்பாடும் தொண்டர்களாகவே இருப்போம். அதிமுகவை காப்பதற்கும், மீண்டும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைப்பதற்கும் பாடுபடுவோம். நாம் தொடங்கியிருக்கும் தர்மயுத்தம் மாபெரும் வெற்றியடைய அயராது உழைப்போம். இந்த நேரத்தில் எனது பெயரில் மன்றங்கள் அமைத்து, எனக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்து, உங்களிடமிருந்து என்னை அந்நியப்படுத்திவிடாதீர்கள். நாம் தொடங்கியிருக்கும் புனிதப் போருக்கு தலைமையேற்று நடத்தும் முதன்மைத் தொண்டனாகவே இருக்கும் பெரும் பாக்யம் கிடைத்ததே எனது வாழ்நாளில் கிடைத்த மிகப் பெரிய உயர்வாக நினைக்கிறேன். அந்த மகிழ்ச்சி ஒன்றே எனக்கு போதும்.
வேண்டாம் மன்றங்கள்
எனவே, மன்றங்களாக இருந்தாலும் சரி, பாசறைகளாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட யார் பெயரிலும் தொடங்காமல், நம் இயக்கத்தை உருவாக்கிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களாலும், எதிரிகளாலும், துரோகிகளாலும் அதிமுகவை அசைக்க முடியாத எஃகுக் கோட்டையாக மாற்றி, நாம் அதைக் காட்டிக்காப்போம் என்ற நம்பிக்கையில் நம்மிடம் விட்டுச் சென்றிருக்கும் ஜெயலலிதாவால் உருவாக்கி அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளும், மன்றங்களும் மட்டுமே செயல்பட வேண்டும் என்பதே எனது பணிவான வேண்டுகோள். தமிழக மக்களுக்காக ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணியிருந்த நன்மைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதே நமது லட்சியமாக இருக்கட்டும். அந்த லட்சியங்கள் நிறைவேற. வெற்றி இலக்கை எட்டும்வரை., நம் தர்மயுத்தம் தொடரட்டும் என வேண்டிக் கொள்கிறேன்,
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.