"ஓவர் பட்டாசு".... தங்க தமிழ்ச்செல்வனின் "ஆட்டம்" ஆரம்பம்!
தேனி: தேனியில் நேற்று நடந்த மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தின்போது மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு அவரது ஆதரவாளர்கள் கொடுத்த வரவேற்பால் அந்த பகுதியே அலப்பைறயாகிப் போனது. ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டும் வகையில் தமிழ்ச்செல்வனை களம் இறக்கியுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் செய்த ஆர்ப்பாட்டத்தால் அந்தப் பகுதியே "அடேங்கப்பா ஓவராத்தாய்யா இருக்கு" என்று பீதியாகிப் போனது.
இவரை ஒடுக்க அவரை வளர்த்து விடுவது, அவரை வளர்க்க இவரை கழற்றி விடுவது. இதெல்லாம் அரசியலில் சகஜம். பலரையும் இதுபோல ஜெயலலிதா தூக்கிப் போட்டுப் பந்தாடியதை பல காலமாக பார்த்து வந்தவர் ஓ.பன்னீர் செல்வம். கடைசியில் அவரது நிலையே அப்படியாகி விட்டதுதான் கொடுமை.
ஓ.பி.எஸ்ஸின் பரம வைரியாக கருதப்படுபவர் தங்க தமிழ்ச்செல்வன். இப்போது தேனி மாவட்டத்தில் அவரை லைம்லைட்டுக்குக் கொண்டு வந்துள்ளார் ஜெயலலிதா. இதனால் ஓ.பி.எஸ். தரப்பு மனதுக்குள் குமைந்து கொண்டுள்ளது.

தேனி கூட்டம்
மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளராக புதிதாக நியமிக்கப்படடுள்ள தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நேற்று தேனியில் அதிமுக நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஒரே அலப்பறை!
தங்க தமிழ்ச்செல்வன் நீண்ட நாட்களுக்குப் பிறகு தூசி தட்டி எடுக்கப்பட்டிருப்பதால், அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக காணப்படுகின்றனர். நேற்று தேனியையே பரபரப்பில் ஆழ்த்தி விட்டனர்.

என்னா வெடி!
நேற்றைய கூட்டத்திற்கு தங்க தமிழ்ச்செல்வன் பேச வந்தபோது கிட்டத்தட்ட 10 நிமிட அளவில் பட்டாசுகளை வெடிக்கவித்து அமர்க்களப்படுத்தி விட்டனர். அவர்கள் போட்ட வெடி, சென்னை போயஸ் கார்டன் வரைக்கும் கேட்டாலும் கேட்டிருக்கும். அப்படி ஒரு வெடி.

அண்ணனுக்கு சால்வை!
அதேபோல கூட்டத்திற்கு வந்த வந்த அத்தனை பேருமே கிட்டத்தட்ட தங்கத் தமிழ்ச் செல்வனுக்கு சால்வை அணிவித்தனர். அந்த அளவுக்கு மலை போல குவிந்து விட்டது சால்வைகள்.

மகன் வரவில்லை
இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ்ஸின் மகன் ஓ.பி.எஸ். ரவீந்திர குமார் வரவில்லை. அதேசமயம் ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் மூச்சுக் கூட காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்து நடந்த வேடிக்கைகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஓவர்தான்
தங்க தமிழ்ச்செல்வனுடைய ஆதரவாளர்கள் நேற்று போட்ட ஆட்டம் சற்று ஓவர்தான் என்று முனுமுனுக்கிறது தேனி வட்டாரம். ஓ.பி.எஸ் தரப்பு கூட இப்படியெல்லாம் ஆடியதில்லை. அதை ஓபிஎஸ் அனுமதித்ததில்லை. தமிழ்ச்செல்வன் தரப்பு அமைதியாக இருப்பது அவருக்கு நல்லது என்றும் முனுமுனுக்கிறார்கள்.

எங்கு பார்த்தாலும் தமிழ்ச்செல்வன் பேனர்கள்
நேற்று கூட்டம் நடந்த பகுதி முழுவதும் ஜெயலலிதா படத்துக்கு அடுத்து தமிழ்ச்செல்வன் படமும், பேனரும்தான் ஏக போகமாக நிரம்பியிருந்தது. இதுவும் எதிர்த் தரப்பினரை அதிர வைத்தது.

ரஜினி மாதிரியே பேச்சு!
இந்தக் கூட்டத்தில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் முத்து படத்தில் ரஜினி பேசுவது போல, கட்சியில் யாருக்கு என்ன பதவி வரும், எப்போது போகும் என்று யாருக்கும் தெரியாது. அம்மா கையில்தான் எல்லாம் உள்ளது என்று பொடி வைத்துப் பேசி கூட்டத்தினரை சிரிக்க வைத்தார்.
அவரது பேச்சைக் கேட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முகத்தில்தான் சலனமே இல்லை!












Click it and Unblock the Notifications