காவியின் பிடியில் கைதியாக ஓ.பன்னீர் செல்வம் - சொல்கிறது டாக்டர் நமது எம்ஜிஆர்!
ஓபிஎஸ் காவியின் பிடியில் கைதியாக இருப்பதாக அதிமுக அம்மா கட்சியின் ஆதரவு நாளிதழான டாக்டர் நமது எம்ஜிஆர் ஓ.பன்னீர்செல்வத்தையும் பாஜகவையும் விளாசியுள்ளது.
சென்னை: ஓபிஎஸ் காவியின் பிடியில் கைதியாக இருப்பதாக அதிமுக அம்மா கட்சியின் ஆதரவு நாளிதழான டாக்டர் நமது எம்ஜிஆர் ஓ.பன்னீர்செல்வத்தையும் பாஜகவையும் விளாசியுள்ளது. ஒய் செக்யூரிட்டி பாதுகாப்பு அளித்துள்ளதன் மூலம் பாஜகவுக்கும் ஓபிஎஸ்க்கும் உள்ள தொடர்பு அம்பலமாகியுள்ளதாகவும் நமது எம்ஜிஆர் நாளிதழ் குற்றம்சாட்டியுள்ளது.
அதிமுக அம்மா கட்சியின் ஆதரவு நாளிதழான டாக்டர் நமது எம்ஜிஆர் அக்கட்சியின் வாயாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அந்த நாளிதழ் பாஜகவையும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸையும் விளாசி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பாஜகவை சீண்டி அதிமுக அம்மாக கட்சி ஆதரவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதற்கு பாஜக தான் காரணம் எனக்கூறி சசிகலா தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயா டிவி செய்தி வெளியிட்டது.
பாஜககை சீண்டும் நமது எம்ஜிஆர்
இரட்டை இலை முடக்கப்பட்டதன் சதிக்கு பின்னாள் பாஜகதான் இருப்பதாக குற்றம்சாட்டுவது போல் பொதுமக்களின் கருத்தை போடுவது போன்ற செய்திகளையும் வெளியிட்டது. இந்நிலையில் நேற்று இரண்டாவது முறையாக ஓபிஎஸையும் பாஜகவையுட் வச்சு வாங்கி நமது எம்ஜிஆர் கட்டுரை வெளியிட்டுள்ளது.
ஒய் செக்யூரிட்டி ஒய்?'
'ஒய் செக்யூரிட்டி ஒய்?' என்ற தலைப்பில் புனைப்பெயரில் அந்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. ஓபிஎஸ்க்கு ஒய் செக்யூரிட்டி தேவையில்லாத ஒன்று என்றும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள சங்பரிவார் தலைவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
குள்ளநரிக்கு பாதுகாப்பு
இதேபோல் ஆர்எஸ்எஸ் மற்றும் அதுதொடர்பான குழுக்களைச் சேர்ந்த தலைவர்களுக்கு ஒய், இசட் பாதுகாப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது ஓபிஎஸ்க்கும் தேவையில்லாமல் ஒய் செக்யூரிட்டி பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது அவர், ஆர்எஸ்எஸ் குரூப்பின் அங்கமாக உள்ளாரா என்றும் நமது எம்ஜிஆர் நாளிதழ் கேள்வி எழுப்பியுள்ளது. இதன்மூலம் ஒரு குள்ளநரிக்கு ஆயுதமேந்திய காவலர்களின் பாதுகாப்பை வழங்கி பாஜக கண்காணிப்பது உறுதியாகியுள்ளதாகவும் நமது எம்ஜிஆர் குற்றம்சாட்டியுள்ளது.
சொத்துக்களை மக்களுக்கு எழுதி கொடுத்தாரா?
ஓபிஎஸ் என்ன பெரிய மகானா, அவரது பலகோடி சொத்துக்களை மக்களுக்கு எழுதி கொடுத்துள்ளாரா? மக்களுக்காக போராடியவரா? இயற்கை வளங்கள் மற்றும் மணல் மாஃபியாக்களுக்கு எதிராக செயல்பட்டு போரிட்டவரா? எதுவும் இல்லை. அதனால் அவருக்கு எதற்கு தேவையில்லாமல் ஒய் செக்யூரிட்டி என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளது.
கைகளை எடுப்பேன் என மிரட்டல்
கடந்த மாதம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த ஒபிஎஸ் தரப்பினர் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். எம்எல்ஏ கலைராஜன் ஓபிஎஸின் கைகளை வெட்டுவேன் என மிரட்டியது குறித்து போலீஸிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஓபிஎஸ் தரப்பினர், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பாதுகாப்பு கேட்டனர். இதையடுத்து கடந்த 31ஆம் தேதி முதல் ஓபிஎஸ்க்கு ஒய் செக்யூரிட்டி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.