முதல்வர் எடப்பாடியை தொடர்ந்து பன்னீர் செல்வமும் டெல்லி பயணம்.. ஜனாதிபதி தேர்தலில் நேரில் ஆதரவு
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆதரவு தெரிவிக்க ஓபிஎஸ் நேற்றரவு டெல்லி சென்றுள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து வரும் ஜூலை 17ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.
பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனிடையே ராம்நாத் கோவிந்த் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். அவருக்கு ஆதரவிக்கும்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பிரதமர் மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார்.
அதனைத்தொடர்ந்து அதிமுக அம்மா அணி சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு, ராம்நாத் கோவிந்தை ஆதரவளிக்க முடிவு செய்திருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தமது அணி ஆதரவை தெரிவிக்க முதல்வர் பழனிச்சாமி நேற்று மாலை விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார்.
இந்நிலையில் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை அறிவித்தார். இதைத்தொடர்ந்து அவரை நேரில் சந்தித்து தமது அணி ஆதரவை தெரிவிப்பதற்காகவும் வேட்புமனுத் தாக்கலில் கலந்துகொள்ளவும் நேற்றிரவு ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு விமானம் மூலம் சென்றுள்ளார். அதிமுகவின் இரு அணி தலைவர்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.