ஜெயலலிதா இல்லாத போயஸ் கார்டனுக்குப் போய் விட்டு தலைமைச் செயலகம் வந்த ஓ.பன்னீர் செல்வம்!
சென்னை: இந்தக் காட்சி நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கிறது. அதாவது ஜெயலலிதா பெங்களூர் சிறைச்சாலையில் இருக்கிறார். ஆனால் முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம், நேற்று தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும், இன்று முதல்வராகப் பதவியேற்ற பின்னரும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்குப் போய் விட்டு பின்னர்தான் அடுத்த வேலையைப் பார்த்துள்ளார்.
நேற்று மாலையில் கூடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களின் அடுத்த தலைவராக ஓ.பன்னீர் செல்வத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

இதையடுத்து நேராக போயஸ் கார்டன் வீட்டுக்குக் கிளம்பிச் சென்றார் ஓ. பன்னீர் செல்வம். அங்கு வீட்டுக்குள் போய் விட்டு திரும்பி வந்தார். அதன் பின்னர்தான் அவர் தனது சகாக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு விரைந்தார்.
அதேபோல இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவுக்கு வந்த அவர் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். பின்னர் நேராக மீண்டும் போயஸ் கார்டன் வீட்டுக்குப் போனார். அங்கு போய் விட்டு அதன் பிறகே தலைமைச் செயலகம் புறப்பட்டுச் சென்றார்.
சென்டிமென்ட்டாக ஜெயலலிதாவின் வீட்டுக்கு பன்னீர் செல்வம் போயிருக்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications