இலங்கை சிறையில் 30 மீனவர்கள்.. 119 படகுகள்.. விடுவிக்க நடவடிக்கை கோரி மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்
இலங்கை சிறையில் உள்ள 30 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோடிக்கு முதல்வர் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். மேலும் 119 படகுகளையும் விடுவிக்க அவர் கோரியுள்ளார்.
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த 5 மீனவர்கள், நெடுந்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் எடுத்துச் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே சிறையில் 25 பேர் உள்ள நிலையில் இந்த 5 பேரை சேர்த்து 30 பேர் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும், இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ள 119 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் கோரியுள்ளார்.
தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதுபோன்று எதிர்க்காலத்தில் நடைபெறாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து மீனவ மக்கள் கோரி வந்தாலும், அதற்கு இன்னும் நிரந்தர தீர்வு எட்டப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.