தொடர் மழை... ஒட்டன்சத்திரத்தில் தக்காளி கிலோ ரூ.2க்கு விற்பனை... சென்னையில் ரூ.25 !
சென்னை: ஒட்டன்சத்திரத்தில் கிலோ 2 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி சென்னையில் ரூ. 25க்கு விற்கப் படுகிறது.
தமிழ்நாட்டில் பரவலாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. குறிப்பாக தக்காளி செடிகள் மழையால் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
செடியிலிருந்து பறிக்கப் பட்ட தக்காளிகளும் மார்க்கெட்டில் சரியான விலைக்கு போகாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தென்மாவட்ட தக்காளி விளைச்சல்...
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி, ஒட்டன்சத்திரம், ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் தக்காளி அதிகம் விளைகிறது. இதில் தென் மாவட்டங்களில் விளையும் தக்காளி அந்தந்த மாவட்டத்திலேயே விற்பனை செய்யப்படுகிறது. மீதியை கேரளாவுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
குறைந்த விலை...
அந்தவகையில், தற்போது ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு அதிக அளவு தக்காளி வரத்து உள்ளது. அனால், மழையால் பழங்கள் சீக்கிரம் அழுகி விடுவதால் அங்கு கிலோ 2 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
குப்பையில் கொட்டப் படுகிறது...
ஆனால், குறைந்த விலைக்கு விற்கப்பட்ட போதும் தக்காளி அதிகம் விற்கப் படுவதில்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதனால், அதிகப் படியான தக்காளிகள் குப்பையில் கொட்டப் படுகிறதாம்.
சென்னையில் அதிக விலை...
இதற்கிடையே, இதற்கு நேர்மாறாக சென்னையில் தக்காளி கிலோ 25 ரூபாய்க்கு விற்கப் படுகிறது. இந்தக் கூடுதல் விலைக்கும் மழையையே காரணமாகச் சொல்கிறார்கள் வியாபாரிகள்.
மழை தான் காரணம்...
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கிருஷ்ணகிரி, ஓசூர், ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்துதான் தக்காளி உள்பட அனைத்து காய்கறிகளும் வருகிறது. பெட்டிகளில் அடைத்து கொண்டு வரப்படும் தக்காளியில், நான்கில் ஒரு பங்கு அழுகி விடுவதாகவும், ஒட்டன்சத்திரம் தக்காளி சென்னைக்கு வருவதில்லை என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.