"திஹார் ரிட்டர்ன்" தினகரனுக்கு ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சுந்தர்ராஜ் ஆதரவு
திகார் சிறையிலிருந்து வெளியே வந்த டிடிவி தினகரனுக்கு ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சுந்தரராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தினகரனுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஜாமீன் பெற்று கடந்த சனிக்கிழமை சென்னை வந்தார். முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிலையில் அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் தன்னை நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கே உண்டு என்றும் தெரிவித்தார்.

தினகரன், சசிகலா ஆகியோரை கட்சி, ஆட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக தெரிவித்திருந்த அமைச்சர் ஜெயகுமாருக்கு செக் வைக்க தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் போர்க் கொடி உயர்த்தினர். இந்நிலையில் கூவத்தூரில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றாததால் அதிருப்தி அடைந்த எம்எல்ஏ-க்கள் தற்போது தினகரனுக்கு ஆதரவு அளித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தினகரனுக்கு ஏற்கெனவே 24 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ், உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி, திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன், மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான் உள்ளிட்டோரும் தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
தமிழக அரசியல் குறித்தும் எடப்பாடி அரசு குறித்தும் தனது ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சுந்தரராஜும் இன்று தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனால் அவருக்கு 33 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications