எங்களுடைய போராட்டமும் விவசாயிகளுடைய போராட்டமும் ஒன்றுதான்... தினகரன்
எங்களுடைய போராட்டமும், விவசாயிகளுடைய போராட்டமும் ஒன்றுதான் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தேனி: விவசாயத்தை காப்பதற்காக விவசாயிகள் போராடுவதை போல கட்சியை காப்பதற்காக நாங்கள் போராடி வருகிறோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தேனியில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பதவிக்காக அலைபவர்கள் நாங்கள் அல்ல. அதிமுக ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை.
ஓபிஎஸ்ஸுடன் சுயநலத்துக்காக சேர்த்து கொண்டனர். அவரும் பதவிக்காக யாசகம் மேற்கொண்டார். தர்மயுத்தம் எல்லாம் சும்மா. பதவிக்காக கூறியது. ஆனால் தற்போது தியாகத்துக்கும் துரோகத்துக்குமான யுத்தம் நடைபெறுகிறது.
அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் எங்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள். ஜெயலலிதா காலத்தில் கட்சி ராணுவ கட்டுப்பாடுடன் இருந்ததற்கு நாங்கள்தான் காரணம்.
ஒன்றரை கோடி தொண்டர்கள் இருந்த கட்சியில் விசுவாசமாக இருந்தவர்கள் யார் என்று ஜெயலலிதாவுக்கு அடையாளம் காட்டியவர்களும் நாங்கள்தான். விவசாயம் அழியக் கூடாது என்று விவசாயிகள் போராடுகின்றனர். அதேபோல் கட்சி அழிந்துவிடக் கூடாது என்பதற்காக நாங்கள் போராடுகிறோம் என்று தினகரன் தெரிவித்தார்.