2016ல் தனித்து போட்டி... ஆர்.கே.நகரில் இ.கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஓட்டு: சீமான்
சென்னை: ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 2016 சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர்கட்சி தனித்து போட்டியிடப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் ஞாயிறன்று கூடுவாஞ்சேரி, என்.பி.ஆர்.திருமண அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கடந்த மே 26ம் தேதி இன எழுச்சி அரசியல் மாநாட்டை திருச்சியில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம் என்றார்.

தமிழகம் முழுவதும் பயணம்
எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை தேர்தலை நோக்கிய பயணம். அதற்காக வருகிற ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இன எழுச்சி அரசியல் பெரும் பயணத்தை லட்சிய உறுதியோடு தொடங்குகிறோம். ஊர் ஊராக சென்று ஏன்? நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பற்றி பொதுமக்களிடம் எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்றார்.

ஆர்.கே.நகரில் ஆதரவு
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாரையும் ஆதரித்து வேலை செய்யவில்லை ஆனால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போடுவோம். 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்று திருச்சி, மதுரை, புழல், கோவை, வேலூர் சிறைச்சாலைகளை ஜூலை மாதம் 10ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.

2016 சட்டசபை தேர்தல்
பண நாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை காப்போம். நமது அதிகாரம் நமது மக்களுக்கு தான் என்பதை உணர்த்தும் முழக்கங்களை மக்களிடம் வைப்போம். தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுடன் வருகிற 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட இருக்கிறோம், புதுச்சேரியிலும் தனித்து போட்டியிட உள்ளோம்.

வேட்பாளர்கள் யார் யார்
தனித்து போட்டி என்று அறிவித்த சீமான் முதற்கட்டமாக வேட்பாளர்களின் பெயர்களையும் அறிவித்தார்.
நாகர்கோவில் - கா.கலைக்கோட்டுதயம், தமிழன் தொலைக்காட்சி நிறுவனர், சிவகங்கை - வழக்கறிஞர் எழில்குமரன், திருவாடனை - வழக்கறிஞர் ராஜீவ்காந்தி என்கிற அறிவுச்செல்வன், சோழிங்கநல்லூர் - வழக்கறிஞர் இராசன், திருப்பத்தூர் - கோட்டைக்குமார், மைலம் - மருத்துவர் விஜயலெட்சுமி, அம்பத்தூர் - அன்புத்தென்னரசன், கவுண்டம்பாளையம் - இயக்குனர் கார்வண்ணன், கும்பகோணம்- வழக்கறிஞர் மணி செந்தில் ஆகியோர் முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பேராவூரணி, சிங்காநல்லூர் உள்ளிட்ட சட்டமன்றத்தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications