அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... விமானநிலையத்தில் இருந்து ‘நாசா’
சென்னை: அரசியல் கட்சிகளுக்கு வெற்றி தோல்வி சகஜம். நான்கு மாநில தேர்தல் முடிவுகள் லோக்சபா தேர்தலில் எதிரொலிக்காது' என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியதும் வெற்றி பெற்றார். தி.மு.க. 13 ஆண்டுகளுக்கு பின்பே வெற்றி பெற்றது. தோல்வி அடைந்ததும் ஒரு கட்சி முடிந்து விட்டது என்பதை ஏற்க முடியாது. அரசியல் கட்சிகளுக்கு வெற்றி தோல்வி சகஜம் ஆகும்.

எதிர்பார்த்து ஏமாந்தோம்
2004, 2009-ம் ஆண்டுகளில் பாரதீய ஜனதா கட்சி தோல்வி தழுவியதை நினைவில் கொள்ளவேண்டும். தற்போதைய தேர்தலில் சத்தீஷ்கார், டெல்லி மாநிலங்களில் காங்கிரசுக்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளோம்.

கட்சியை பலப்படுத்துவோம்
4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி மற்றும் உயர்மட்டக்குழு தலைவர்கள் ஆலோசனை நடத்தி கட்சியை பலப்படுத்துவது குறித்து முடிவு செய்வார்கள்.

ஆம் ஆத்மிக்கு ஆதரவில்லை
காங்கிரஸ் கட்சி என்றைக்கும் சிறிய, பெரிய கட்சிகளுக்கு உரிய மரியாதை அளித்து வருகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்க மாட்டோம். பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்.

மோடி காரணமல்ல
4 மாநில தேர்தல் முடிவுகளுக்கு நரேந்திரமோடி அலைதான் காரணம் என்பது சரியல்ல. சத்தீஷ்காரில் காங்கிரஸ் கட்சியும் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே மோடி அலை என்பதெல்லாம் பொய்யாகும்.
மாநில தேர்தல், மாநில பிரச்சினைகளை முன்வைத்து நடக்கும். மாநில தேர்தல் முடிவுகள், லோக்சபா தேர்தலில் எதிரொலிக்காது என்றும் நாராயணசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications