எங்களை வஞ்சித்து, உரிமைகளை கபளீகரம் செய்துவிட்டார் சசிகலா.. பி.ஹெச் பாண்டியன்
எங்களை வஞ்சித்து, உரிமைகளை கபளீகரம் செய்துவிட்டார் சசிகலா என்று பி. ஹெச் பாண்டியன், சசிகலா மீது குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை; ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் 2 மாதத்திற்கு பின்னர் இன்று மவுனம் கலைத்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் சபாநாயகர் பி. ஹெச். பாண்டியன், எங்களை வஞ்சித்து, உரிமைகளை கபளீகரம் செய்துவிட்டார் சசிகலா என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் பி.ஹெச். பாண்டியன் கூறியதாவது:
எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுகவில் பொதுச் செயலாளர், பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்க முடியாது. அப்படி கட்சியின் சட்டத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதனை மாற்றவோ, திருத்தவோ கூட முடியாது. அப்படி இருக்கும் நிலையில், எங்களை வஞ்சித்து, உரிமைகளை கபளீகரம் செய்துள்ளார் சசிகலா.
இதனை நான் எதிர்க்கிறேன். இதற்காகத்தான் உங்களை எல்லாம் சந்தித்து உண்மைகளை சொல்கிறேன். அதிமுகவின் சட்டதிட்டங்கள், அதன் வரலாறு யாருக்கும் தெரியாது. அது தெரிந்தவர்கள் எல்லாம் மறைந்துவிட்டார்கள். அதனால்தான் நடராஜன் போன்றவர்கள் தைரியமாக செயல்படுகிறார்கள்.
முதல்வர் பதவியும், பொதுச் செயலாளர் பதவியும் சசிகலா ஏற்க தகுதி இல்லாதவர். மிடாஸ் மதுபான நிறுவனத்தில் சசிகலாவின் உறவினர்கள் அத்தனை பேரும் பங்குதாரர்கள். 17 ஆயிரம் கோடி ரூபாய் ஆண்டுக்கு வருமானம் வருகிறது. இதுபோன்ற பின்னணி கொண்டவர் சசிகலா முதல்வர் ஆகும் தகுதி இல்லாதவர் என்று காட்டமாக கூறியுள்ளார்.