அய்யாக்கண்ணு மீதான தாக்குதலை கண்டிக்கிறேன்... பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை!
அய்யாக்கண்ணு மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை : நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மீதான பாஜக பெண் நிர்வாகியின் தாக்குதல் கண்டனத்திற்குரியது என்று காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அய்யாக்கண்ணுவை தாக்கிய பெண் மீது அரசு வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளதாவது : தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு விவசாயிகள் கோரிக்கைகளை முன்வைத்து மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது குமரி முதல் கோட்டை வரை நடை பயண பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அவரது கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து நிறைவேற்ற வேண்டிய பிரதமர் மோடி பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் மூலம் அவதூறு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அய்யாகண்ணு மீது தூத்துக்குடி மாவட்ட பாஜக மகளிரணி தலைவர் நெல்லையம்மாள் தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது.
இத்தாக்குதலானது பாஜக தலைமை திட்டமிட்டு ஒரு பெண்ணை விட்டு தாக்குதல் நடத்தியிருப்பது வெட்ககேடானதும் பிற்போக்கு தனமானது ஆகும். விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நாட்டை ஆளும் கட்சிக்கு இல்லையே என்பது வேதனையளிக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளை அவமானப்படுத்தும் செயலாகும்.
பா.ஜ.க தொடர்ந்து அமைதியான தமிழகத்தை கலவர பூமியாக மாற்றி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது கீழ்தரமான செயல் ஆகும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யாக்கண்ணு வயது முதிர்வை கூட பொருட்படுத்தாமல் பொது இடத்தில் ஆன்மீக தளத்தில் தாக்குதல் நடத்திய நெல்லையம்மாள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்திட வேண்டும் என்றும் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications