நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து தப்பிக்க மத்திய அரசு நாடகம்... மணியரசன் குற்றச்சாட்டு!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து தப்பிக்க மத்திய அரசு போடும் நாடகமே காவிரி தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்யும் திட்டம் என்று பி.ஆர்.பாண்டியன் மற்றும் மணியரசன் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்துவதற்காகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகவுமே மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டிருப்பதாக காவிரி உரிமைகள் மீட்புக் குழுவின் தலைவர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் நாளைக்குள் அமைக்கப்படவேண்டிய நிலையில் தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு குறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் பேசியதாவது : காவிரி விவகாரத்தில் எந்த அளவிற்கு நாடகமாடலாமோ அந்த அளவிற்கு காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு நாடகமாடி வருகிறது. தமிழக அரசு உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

நாங்கள் டெல்லியில் தொடர்ந்து போராடி வருகிறோம், ஆனால் மத்திய அரசு செவிசாய்க்கவே இல்லை. 6 வார காலம் பொருத்திருந்து விட்டு, நாளைக்குள் கெடு முடியும் நிலையில் விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வதாக சொல்வது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்க செய்யும் மோசடியான நடவடிக்கை.
தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?
எங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம், தமிழகத்தில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து வந்து டெல்லியை முடக்க வேண்டும். இன்றைய சூழலில் இதைத் தான் செய்ய வேண்டும். ஆனால் மத்திய அரசு மீது நம்பிக்கை வைத்து காத்திருக்கிறோம் என்று முதல்வர் தொடர்ந்து கூறி வருகிறார். 24 மணி நேரத்திற்குப் பிறகு முதல்வரின் நம்பிக்கை பொய்த்தால் அவர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பது தான் இன்று எல்லோரின் கேள்வியாக இருக்கிறது, முதல்வரின் அடுத்தகட்ட நடவடிக்கைக்காகத் தான் நாங்கள் காத்திருக்கிறோம் என்று பி.ஆர். பாண்டியன் கூறினார்.
மத்திய அரசின் தந்திரம்
காவிரி உரிமைகள் மீட்புக் குழுவின் தலைவர் பெ. மணியரசன், மத்திய அரசின் முடிவு குறித்து கூறியதாவது : நாளைக்கு கெடு முடிவடையும் நிலையில் தீர்ப்பு குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்கிறது. இது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கால வரம்பின்றி நேரம் கடத்துவதற்கான நடவடிக்கை.
அவமதிப்பு வழக்கில் இருந்து தப்பிக்க
உச்சநீதிமன்ற தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் தீர்ப்பின் விளக்கத்திற்காக காத்திருக்கிறோம் என்று கூறி தப்பித்துக் கொள்ளத் தான் அரசு இந்த நடவடிக்கையை எடுக்கிறது. இப்போது விளக்கம் கேட்கும் மத்திய அரசு ஏன் முன்கூட்டியே தீர்ப்பில் திட்டம் என்று தான் உள்ளது, காவிரி மேலாண்மை வாரியம் என்று குறிப்பிடப்படவில்லை என்று ஆணித்தரமாக சொன்னது.
சுப்ரீம்கோர்ட்டே அமைக்க வேண்டும்
கெடு முடிவதால் புதுச்சேரி, தமிழகம் நீதிமன்ற அவமதிப்பு தொடர்வது பற்றி யோசித்து வரும் நிலையில் அதில் இருந்து தப்பித்துக் கொள்ளவே பிரதமர் நரேந்திர மோடி அரசு இந்த யுக்தியை கையில் எடுத்திருக்கிறது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் உச்சநீதிமன்றமே தலையிட்டு வாரியம் அமைக்க வேண்டும் என்று எங்கள் தரப்பில் வழக்கறிஞர்களை வைத்து வாதிடி முடிவு செய்துள்ளோம். சட்டத்தை பயன்படுத்தி தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறது மத்திய அரசு என்றும் மணியரசன் கூறினார்.












Click it and Unblock the Notifications