ரூ.75 கோடி வைப்பு தொகை செலுத்தி ஜாமீனில் வெளிவந்தார் பச்சமுத்து!
சென்னை: 111 பேரிடம் ரூ.74.39 கோடி வாங்கி மோசடி செய்த வழக்கில், எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவரும், ஐ.ஜே.கே. கட்சியின் நிறுவனத் தலைவருமான பாரிவேந்தர் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
எஸ்.ஆர்.எம். பல்கலைகழக மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக சுமார் 75 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 26ம் தேதி பச்சமுத்து கைது செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் நிபந்தனைகளுடன் நேற்று ஜாமீன் வழங்கினார்.
அதன்படி ரூ.75 கோடி வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட வைப்புத் தொகைக்கான ரசீது, பச்சமுத்துவின் பாஸ்போர்ட் உள்ளிட்டவை சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் சிவக்குமார், காமராஜ் ஆகிய இருவரும் தலா 10 லட்ச ரூபாய் ஜாமீன் தொகை செலுத்தியது தொடர்பாக, சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் முன்பு சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களை அவர் ஏற்றுக் கொண்டார்.
இதற்கான ஜாமீன் உத்தரவு புழல் சிறைக்கு அனுப்பப்பட்டதைடுத்து சிறையிலிருந்த பச்சமுத்து நிபந்தனை ஜாமீனில் இன்று மாலை விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் படி நாளை முதல் வழக்கை விசாரிக்கும் அதிகாரி முன்பாக பச்சமுத்து நேரில் ஆஜராகி கையெழுத்திடுவார் என அவரின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
புழல் சிறையிலிருந்து வெளியே வந்த பச்சமுத்துவுக்கு, சிறை வாயிலில் திரண்டிருந்த இந்திய ஜனநாயகக் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தொண்டர்கள் தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.