கள்ளக்குறிச்சி எஸ்பியாக சார்ஜ் எடுத்த பகலவன்.. ‘அமைதியான சூழலை கொண்டுவருவதே முதல் வேலை’ அதிரடி பேட்டி
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைதியான சூழலை உருவாக்குவதே முதல் பணியாக இருக்கும் என்று கள்ளக்குறிச்சி எஸ்.பியாக பொறுப்பேற்றுள்ள பகலவன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள பகலவன், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

கள்ளக்குறிச்சி வன்முறை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூரில் செயல்படும் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த 13ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. போலீசாரை தாக்கி, பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தினர்.

நடவடிக்கை
இந்நிலையில், இந்த விவகாரத்தை திறம்படக் கையாளத் தவறிய அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வக்குமார் மாற்றப்பட்டு, திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன், கள்ளக்குறிச்சி எஸ்.பி ஆக நியமனம் செய்யப்பட்டார். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜடாவத் நியமனம் செய்யப்பட்டார்.

பகலவன் பொறுப்பேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகலவன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் முன்னுரிமை கொடுத்துச் செயல்படுவேன் என உறுதி மொழி ஏற்று கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பியாக பொறுப்பேற்றுள்ளார் பகலவன்.

பகலவன்
கள்ளக்குறிச்சியின் புதிய எஸ்.பி பகலவன் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கோட்டார்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். எம்.ஏ பொருளாதாரம் படித்தவர். 1998-ஆம் ஆண்டு துணை போலீஸ் சூப்பிரண்டாக தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார். இவர் கடலூர், வேலூர், விழுப்புரம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் சிறப்பாகப் பணி செய்தவர்.

திருவல்லிக்கேணி துணை ஆணையர்
தலைநகர் சென்னையில் தியாகராயநகர், அடையாறு, பூக்கடை துணை கமிஷனராக பதவி வகித்துள்ளார். சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராகவும் இருந்துள்ளார். திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பதவியில் இருந்த இவரை கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளராக தமிழக அரசு நியமித்துள்ளது. இவர் வரும் ஜனவரியில் இவர் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெறுவார்.
Recommended Video

அமைதியான முறையில்
கள்ளக்குறிச்சி எஸ்.பியாக பொறுப்பேற்ற பின்னர் பேட்டியளித்த பகலவன், "சிபிசிஐடி போலீசார் மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும். உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மாணவையின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்து மாணவியின் உடல் நல்லடக்கம் அமைதியான முறையில் நடைபெறத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications