பூட்டியே கிடந்த பையனூர் பங்களாவில் சசி குரூப்.. குண்டர்களா? அரசுடைமையாக்கப்படும் என்ற பீதியா?
இசையமைப்பாளர் கங்கை அமரனிடமிருந்து பறிக்கப்பட்ட பையனூர் பங்களாவை சசி குரூப் பயன்படுத்த தொடங்கியுள்ளது.
சென்னை: இசையமைப்பாளர் கங்கை அமரனை மிரட்டி பையனூர் பங்களாவை சசி குரூப் வாங்கியதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மூடியே கிடந்த அந்த பங்களாவை தற்போது சசி கும்பல் பயன்படுத்த தொடங்கியுள்ளது.
சென்னை ஒஎம்ஆர் சாலையில் உள்ள பையனூரில் இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று இருந்தது. இதனை 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை, முதல்முறையாக ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்த போது, இசையமைப்பாளர் கங்கை அமரனை சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மிரட்டி வாங்கியுள்ளனர்.
மேலும், அந்த பங்களாவைச் சுற்றி உள்ள 100 ஏக்கர் நிலத்தை கருங்குழிப்பள்ளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பலரை மிரட்டி சசி குரூப் வாங்கியுள்ளது. ஜெயலலிதாவின் தோழியான தொடக்கத்திலேயே இத்தனை ஏக்கர் நிலம் மற்றும் பங்களாவை சசி உறவினர்கள் மிரட்டிப் பறித்தனர்.
பறிக்கப்பட்ட பையனூர் பங்களா
இதுகுறித்து அண்மையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த இசையமைப்பாளர் கங்கை அமரன் கூட தான் மிரட்டப்பட்டது குறித்தும் தனது பங்களாவை சசிகலா குரூப் பறித்தது குறித்தும் வெளிப்படையாக கூறினார்.
பூட்டியே கிடந்த பங்களாவில் நடமாட்டம்
பெரும் சர்ச்சைக்கு இடையில் இருந்த இந்த பங்களாவை கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தாமல் சசி குரூப் பூட்டியே வைத்திருந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக, கங்கை அமரனின் பேட்டிக்கு பின்னர் அந்த பங்களாவில் ஆள் நடமாட்டம் உள்ளது.
உற்றுநோக்கப்படும் பங்களா
மேலும் இரவில் பங்காளவை சுற்றி அதிக வெளிச்சம் பாய்ச்சக் கூடிய விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. கங்கை அமரனின் பேட்டிக்கு பின்னர் பையனூர் பங்களா உற்று நோக்கப்படுகிறது.
குண்டர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனரா?
இதன் காரணமாக அந்த பங்களாவை சசி குரூப் பயன்படுத்த தொடங்கியுள்ளதா அல்லது போலீசார் கெடுபிடியால் மன்னார்குடியில் இருந்து இறக்கப்பட்ட குண்டர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அரசுடைமையாக்கப்படும் அச்சமா?
மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிக்கு எதிராக தீர்ப்பு வந்து அவர் சிறைக்கு சென்றுள்ளதால் மிரட்டி வாங்கப்பட்ட சொத்துக்களை அரசு பறிமுதல் செய்து விடும் என்ற அச்சத்தில் சசி குரூப் அதனை பயன்படுத்த தொடங்கியுள்ளதா என்றும் மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.