பாளையங்கோட்டை பாஜக பிரமுகர் கொலை.. காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
நெல்லை: பாளையங்கோட்டையில் பாஜக பிரமுகர் கொலையை தடுக்க தவறியதால் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டை அருகே மூளிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் பாண்டியன். இவர் பாஜக மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் ஜெகன் நேற்று முன் தினம் இரவு தனது பைக்கில் பாளையங்கோட்டையில் இருந்து மூளிக்குளம் சென்றார்.

அங்குள்ள சுடலை மாட சுவாமி கோயில் அருகே உள்ள வாய்க்கால் பாலத்தில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்களால் சரமாரியாக ஜெகன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 3 பைக்குளில் வந்த 6 பேர் திடீரென ஜெகனை சுற்றி வளைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர்.
இதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். மூளிக்குளம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் பிரபுதான் கொலைக்கு மூல காரணம் என சொல்லப்படுகிறது.
மேலும் அவரை கைது செய்ய வேண்டும் என ஜெகனின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஜெகனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். உயிரிழந்த பாஜக பிரமுகர் கொலை வழக்கில் அனிஷ், பாஸ்கர், சந்துரு, அஜித், விக்கி, வசந்த் ஆகிய 6 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திமுக பிரமுகர் பிரபு உள்ளிட்ட 5 பேரை தனிப்டை போலீஸார் தேடி வந்தனர். 3 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் தனிப்படை போலீஸார் நெல்லை மாவட்டத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற மூளிக்குளம் பிரபுவை கைது செய்துள்ளனர். இதுவரை இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜெகனின் கொலையை தடுக்க தவறியதாக பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் காசி பாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பாளையங்கோட்டை காவல் துறை ஆணையர் பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications