டிவி பார்த்ததைக் கண்டித்த தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது
திருப்பூர்: பல்லடம் அருகே டி.வி. பார்த்ததை கண்டித்ததால் தந்தையை அடித்துக்கொன்ற மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பரமசிவம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (60). விசைத்தறி அதிபரான இவரது 28 வயது மனநிலை பாதிக்கப் பட்ட மகன் வேலுச்சாமி.
வேலுச்சாமி கடந்த 2010-ம் ஆண்டு தனது தாயார் சுப்புலட்சுமியை அரிவாளால் வெட்டிக் கொன்றார். கொலை வழக்கில் கைதான அவர் கடந்த ஆண்டுதான் விடுதலையானார். எனவே, தந்தையும், மகனும் மட்டும் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு 10 மணி அளவில் வேலுச்சாமி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது டிவியை அணைத்து விட்டு தூங்கச் சொல்லி இருக்கிறார் சின்னச்சாமி. ஆனால், அதனைக் கேட்காமல் தொடர்ந்து டிவி பார்த்துள்ளார் வேலுச்சாமி.
இரவு 11 மணி அளவில் மீண்டும் மகனைக் கண்டித்துள்ளார் சின்னச்சாமி. இதனால் தந்தை, மகன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் அருகில் இருந்த பாவுநூல் கட்டையால் தந்தையின் தலையில் அடித்துள்ளார் வேலுச்சாமி. இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார் சின்னச்சாமி.
பின்னர் மீண்டும் ஒன்றுமே நடக்காதது போல் தொடர்ந்து டிவி பார்த்துள்ளார் வேலுச்சாமி. வெகுநேரமாக சின்னச்சாமி வீட்டில் டி.வி. ஓடிக்கொண்டிருக்கிறதே என்ற சந்தேகத்தில் வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர் கையில் ரத்தக்கறை படிந்த பாவுநூல் கட்டையுடன் வேலுச்சாமி நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆம்புலன்சில் கோவை அரசு மருத்துவமனைக்கு சின்னச்சாமியை அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
உடனடியாக இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. விரைந்து வந்த போலீசார் வேலுச்சாமியைக் கைது செய்தனர்.
டிவி பார்க்கும் தகராறில் பெற்ற மகனே தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.