பஞ்சு அருணாசலம் உடல் தகனம் - திரை உலக பிரபலங்கள் இறுதி அஞ்சலி
சென்னை: மறைந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர், பாடலாசிரியர் பஞ்சு அருணாசலத்தின் உடல் கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இளையராஜா, கங்கை அமரன், எஸ்.பி.முத்துராமன், கேயார் ஏராளமான திரை உலக பிரபலங்கள் பங்கேற்று பஞ்சு அருணாசலத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பழம்பெரும் திரைப்பட இயக்குநர் பஞ்சு அருணாசலம் 9ம் தேதி பிற்பகல் காலமானார். அவரது மகன் சண்முகம், மகள் கீதா இருவரும் அமெரிக்காவில் இருந்து வர கால தாமதம் ஏற்பட்டது இதனையடுத்து அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 7 மணி அளவில் அவரது உடல் தி. நகர் இல்லத்தில் உடல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏராளமான திரை உலக பிரபலங்கள் வந்து பஞ்சு அருணாசலத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சரியாக மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கியது.
இறுதி ஊர்வலத்தில் இளையராஜா, கங்கை அமரன், எஸ்.பி.முத்துராமன், கேயார், எஸ். தாணு, காந்தி கண்ணதாசன் உள்ளிட்டோரும் பங்கேற்று பஞ்சு அருணாசலத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பஞ்சு அருணாசலத்தின் உடல் கண்ணம்மா பேட்டை மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு பின்னர் தகனம் செய்யப்பட்டது.