பழனியில் பங்குனி உத்திரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
பழனி: பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 12-ஆம் தேதி திருக்கல்யாணமும், 13-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் தைப்பூசமும், பங்குனி உத்திரத் திருவிழாவும் சிறப்பு பெற்றவை.
விழாவை முன்னிட்டு கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து, கொடுமுடி தீர்த்தம் தரித்து பழனிக்கு பாதயாத்திரை வருகின்றனர். இந்த கொடுமுடி தீர்த்தம் பழனி மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
கொடியேற்றம்
பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழா பழனி திருஆவினன்குடி கோயிலில் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இது பங்கேற்ற பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
அஷ்டமியில் கொடி ஏற்றியது ஏன்
பங்குனி உத்திர திருவிழா கொடி ஏற்றம் இந்து சமய சாஸ்த்திரப்படி நல்லநாட்களில்மட்டுமே நடத்தப்படுவது வழக்கம். அஷ்டமி, நவமி தினங்களில் நடத்தப்படுவது கிடையாது.அனால் இன்று அஷ்டமி தினத்தன்று கொடியேற்றியது ஏன் என்று பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முத்துகுமாரசாமி வாகன உலா
விழா நாள்களில் தினமும் வள்ளி, தேவசேனை சமேதர் முத்துக்குமாரசாமி வெள்ளிக்காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்கமயில், வெள்ளியானை, தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் கிரிவீதி உலா எழுந்தருள்கிறார்.
திருக்கல்யாணம்
ஏப்ரல் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) திருக்கல்யாணமும், அதைத் தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் கிரிவீதி உலாவும் நடைபெறுகிறது.
பங்குனி உத்திர தேரோட்டம்
முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் திருத்தேரோட்டம் ஏப்ரல் 13-ஆம் தேதி மாலை 4.20 மணிக்கு நடைபெறுகிறது. ஏப்ரல் 16-ஆம் தேதி சுவாமி தங்கக்குதிரையில் புறப்பாடு செய்த பின், திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
பழனியில் தங்கத்தேர்
விழாவை முன்னிட்டு பழனி மலைக்கோயிலில் ஏப்ரல் 11-ஆம் தேதி திருக்கோயில் சார்பில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறும். விழா நாள்களின் போது குடமுழுக்கு நினைவரங்கில் பக்தி இன்னிசை, பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
சிறப்பு பேருந்துகள்
பங்குனி உத்திர விழாவிற்காக பழநி செல்ல பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு அரசு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.