சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா-ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன்
பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பண்ணாரிஅம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று அதிகாலை 4 மணி அளவில் தொடங்கியது.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரிஅம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டைமாநிலமான கர்நாடக மாநிலத்திலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்
அதன்படி இந்த விழாவில் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து வந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் அம்மன் சப்பரம் தெப்பக்குளத்திற்கு சென்று பின்னர் 3.45 மணியளவில் குண்டத்தின் முன்பு வந்தடைந்தது.
இதைத் தொடர்ந்து கோயில் குண்டத்தின் முன்பு கற்பூர ஆரத்தி காட்டியபின் குண்டம் இறங்கியதை அடுத்து வரிசையில் காத்திருந்த ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேரடியாக அம்மனை தரிசித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.