ஆர்.கே.நகர் மோதல் வழக்கு.. முன் ஜாமீன் கோரி ஓபிஎஸ் மகன், தம்பி சென்னை ஹைகோர்ட்டில் மனு
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் ஓபிஎஸ் தம்பி ராஜா ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (இன்று) மனுதாக்கல் செய்துள்ளனர்
சென்னை: ஆர்.கே. நகரில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும் தினகரன் அணிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்ஜாமீன் கோரி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் ஓபிஎஸ் தம்பி ராஜா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மை வைக்கப்பட்டு இருந்த, மாதிரி சவப்பெட்டியை வைத்து ஓபிஎஸ் தரப்பு பிரசாரம் செய்தனர். இப்பிரசாரத்துக்கு முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார்.
அப்போது ஜெயலலிதாவின் சடலம் போன்ற பொம்மையைப் பயன்படுத்தக்கூடாது என்று காவல்துறையினர் கூறியதையடுத்து அந்த பொம்மை அகற்றப்பட்டது. இருப்பினும் நேதாஜி நகர் அருகில் பிரசாரக் வாகனம் செல்லும்போது, டி.டி.வி. தினகரன் அணியினருக்கும் ஓ.பி.எஸ். அணியினருக்கும் இடையில் திடீரென கலவரம் வெடித்தது.
ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த வாய்பேச முடியாத ஒரு மாற்றுத்திறனாளி காயம் மீது கல்வீச்சும், இருவருக்கு மண்டை உடைப்பும் நிகழ்ந்தது. இதில் இரண்டு அணிகளையும் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதையடுத்து தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.
இதனால் அந்த பகுதி கலவர பூமியாக காட்சி அளித்தது. இதில் டி.டி.வி. அணியைச் சேர்ந்த மேலூர் எம்.எல்.ஏ. செல்வத்துக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த மோதல் தொடர்பாக தண்டையார் பேட்டை காவல் நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார், தம்பி ஓ.ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரவீந்திரநாத் குமாரும், ராஜாவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். மோதல் நடைபெற்ற இடத்தில் நாங்கள் இல்லாத நிலையில் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications