சசிகலா முதல்வராக இப்போது என்ன அவசரம்.. ஓ. பன்னீர்செல்வம் ஆவேசம்
காலம் கனியும் போது சசிகலா முதல்வராக பதவி ஏற்கலாம், அதுவரை சசிகலா காத்திருப்பதில் என்ன தவறு உள்ளது என பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மக்களிடம் சசிகலாவிற்கு எதிராக அலை உள்ளது. காலம் கனியும் போது அவர் முதல்வராக பதவி ஏற்கலாம் என தாம் கூறியதாக முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ள பேட்டியில், சமீபத்தில் நடந்த இந்தியா டுடே நிகழ்ச்சியில் நானும், பொதுச் செயலாளர் சசிகலாவும் கலந்து கொண்டோம். அப்போது, நான் பேசுவதற்கு முன்பாகவே அவர் எழுந்து சென்றுவிட்டார். இதனால், அனைவரும் என்னிடம் கேள்வியெழுப்பினர். ஆனால், நான் அதற்க்கு எந்த வகையிலும் காரணமில்லை.
அதுமட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகளில் என்னை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார்கள். இந்த நிகழ்வுகள் எல்லாம் எனக்கு புரியவில்லை. நான் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் தான் இந்த பிரச்சனைகள் எல்லாம் தொடங்கியது.
ஜெயலலிதா இருந்திருந்தால் அமைச்சர்கள் முதல்வருக்கு எதிராக பேட்டி கொடுத்திருப்பார்களா? , கடந்த சில நாட்களுக்கு முன்னர், எம்.எல்.ஏ கூட்டம் நடைபெறும் போது, என்னிடம் கட்டாயப்படுத்திதான் ராஜினாமா கடிதத்தை வாங்கினர். அப்போது கூட ,அம்மாவின் சமாதி சென்றுவிட்டு வருகிறேன் எனக் கூறினேன். ஆனால் என்னை அதற்கு கூட அனுமதிக்க வில்லை.
காலம் கனியும் போது சசிகலா முதல்வராக பதவி ஏற்கலாம், அதுவரை சசிகலா காத்திருப்பதில் என்ன தவறு உள்ளது. 4 வருடம் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் சசிகலாவுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். ஆனால், மக்களை சந்தித்துதான் வாக்கு கேட்க வேண்டும் என அவர்கள் நினைவுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.