தமிழக போலீசிடமிருந்து பதில் வராததால் சசிகலாவுக்கு இன்னும் பரோல் வழங்கவில்லை: சிறை அதிகாரி விளக்கம்
பெங்களூர்: சசிகலாவுக்கு பரோல் கிடைத்துள்ளதாக தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கூறிய நிலையில் பரோல் இன்னும் வழங்கவில்லை என்று பரப்பன அக்ரஹார சிறை எஸ்.பி. சோமசேகர் தெரிவித்துள்ளார்.
கல்லீரல் மற்றும் கிட்னி பாதிப்பால் உடல்நலம் சரியில்லாமல் சென்னை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, கணவர் நடராஜனை சந்திக்க 15 நாட்கள் பரோல் கேட்டு பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலா விண்ணப்பித்திருந்தார்.

ஆவணங்கள் முழுமையாக இல்லை என்று கூறி கர்நாடக சிறைத்துறை, சசிகலா விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தது. இதையடுத்து கூடுதல் ஆவணங்களுடன் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார் சசிகலா.
நாளை சசிகலாவுக்கு பரோல் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தினகரன் இன்று பெங்களூர் புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில், சசிகலாவுக்கு பரோல் கிடைத்துள்ளதாகவும், கணவரை தவிர வேறு யாரையும் சந்திக்க கூடாது என்ற நிபந்தனையுடன் பரோல் வழங்கப்பட்டுள்ளதாகவும், வெற்றிவேல் இன்று இரவு நிருபர்களிடம் தெரிவித்தார். இதனால் பரபரப்பு கிளம்பியது.
ஆனால் பரப்பன அக்ரஹார சிறை எஸ்.பி. சோமசேகரை நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, "சசிகலாவுக்கு பரோல் வழங்கப்படவில்லை. பரோல் குறித்து, தமிழக போலீசாருக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களுக்கு இன்னும் பதில் வரவில்லை. எனவே பரோல் வழங்கப்படவில்லை" என்றார்.
தினகரன் ஆதரவாளரும், கர்நாடக அதிமுக பிரமுகருமான புகழேந்தியை நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, இன்று கர்நாடகாவில் அரசு விடுமுறை (வால்மீகி ஜெயந்தி), என்பதால் பரோல் கிடைக்கவில்லை. நாளை பரோல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிிவித்தார்.












Click it and Unblock the Notifications