சிவகங்கை சிறுமி பலாத்காரம்: இன்ஸ்பெக்டர், ஏடிஜிபியை கைது செய்ய சிபிசிஐடி முயற்சி
மதுரை: சிவகங்கை சிறுமி பலாத்கார வழக்கில் சிக்கிய 28 பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் முக்கிய தொடர்புடைய மதுரை இன்ஸ்பெக்டரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் அனுமதி கோரியுள்ளனர். அதைதொடர்ந்து ஏடிஜிபியிடம் விசாரிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சிவகங்கையை சேர்ந்த 17 வயது சிறுமியை, அவரது தந்தை, அண்ணன், உறவினர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.

இதில் சிறுமியின் தந்தை முத்துப்பாண்டி, அண்ணன் கார்த்தி, சிவகங்கை எஸ்ஐ சங்கர், கண்டக்டர் நமசிவாயம் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரையை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முதல் ஏடிஜிபி வரை தொடர்பு உள்ளது என கூறப்பட்டதால், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.கடந்த 2 நாட்களுக்கு முன் இவ்வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமி அளித்த வாக்குமூலத்தில், போலீஸ் உயரதிகாரிகள் தன்னை மதுரையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார். சிறுமி கூறிய அடையாளங்களை வைத்து ஒருவர் ஏடிஜிபி, மற்றொருவர் மதுரையை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் என்ற சந்தேகம் சிபிசிஐடி போலீசாருக்கு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
சிக்கிய இன்ஸ்பெக்டர்
இதையடுத்து மதுரையில் உள்ள ஒரு இன்ஸ்பெக்டரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், இந்த வழக்கில் சிக்கிய இன்ஸ்பெக்டர் நான் அல்ல. மற்றொரு இன்ஸ்பெக்டர். அவர் மதுரை உளவுப்பிரிவில் பணியாற்றுகிறார் என்று கூறியுள்ளார். இதை சிபிசிஐடி தரப்பில் ஏற்றுக்கொள்ளவில்லை. காவல்துறை உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்றுதான் இன்ஸ்பெக்டரை கைது செய்யவேண்டும். எனவே, உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்கட்சிகள் கண்டணம்
சிறுமி பலாத்கார சம்பவத்தை கண்டித்து சிவகங்கை அனைத்துக்கட்சி சார்பில் சிவகங்கையில் ஊர்வலம் மற்றும் கண்டன கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர் இதனைத்தொடர்ந்து அனைத்துக் கட்சி சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் கண்டன கூட்டம் குணசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
ரூ.10 லட்சம் நிவாரணம்
கூட்டத்தில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய அனைவரையம் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆதாரங்கள் சேகரிப்பு
இதற்கிடையே இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க ஏடிஎஸ்பி மாரிராஜன் தலைமையில் டிஎஸ்பிக்கள் பாண்டியராஜன், ராஜேந்திரன், மன்மதபாண்டியன், ராஜாசிங் மற்றும் 7 இன்ஸ்பெக்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 60 சதவீத ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. மிக விரைவில் முக்கிய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படலாம் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கைதாகும் ஏடிஜிபி
மேலும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஏடிஜிபியிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக ஏடிஜிபிக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications