தூத்துக்குடியில் காணாமல் போன கூடங்குளம் பாதிரியார்: காவல் நிலையத்தில் புகார்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கூடங்குளம் பாதிரியார் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் வசந்தன் (40). பாதிரியார். கடந்த ஏப்ரல் மாதம் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் மறைமாவட்ட பாதிரியார்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கூடங்குளத்தில் இருந்து வசந்தன் சென்றுள்ளார். ஆனால் அவர் மீண்டும் திரும்பி வரவே இல்லையாம்.
இந்த நிலையில் காணாமல் போன வசந்தனின் சகோதரர் சுகந்தன் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. துரையிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கடந்த ஏப்ரல் மாதம் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் மறைமாவட்ட பாதிரியார்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கூடங்குளத்தில் இருந்து வசந்தன் சென்றார். ஆனால் அவர் மீண்டும் திரும்பி வரவே இல்லை. அவருக்கும் மற்ற பாதிரியார்களுக்கும் இடையே மோதல் உள்ளது. அதனால் அவரை யாராவது கடத்தி சென்று இருக்கலாம் என்ற ஐயம் நிலவுகின்றது. எனவே, அவரை உடனே மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க எஸ்.பி.துரை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கிறிஸ்தவ மக்கள் நிறைந்த பகுதியான தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிரியார் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.